கல்லீரலையும் நுரையீரலையும் சுத்தம் செய்யும் உணவு பொருட்களாகப் பயன்படும் இரண்டு விதைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஓமம்: இரைப்பை, கல்லீரல், பித்தப்பையில் உள்ள செரிமான நீர் போதுமான அளவு சுரக்க ஓமம் உதவுகிறது. செரிமான நீர் சீராக உற்பத்தி ஆகி இரைப்பையின் அமலத்தன்மை இல்லாமல் இருக்க உதவி செய்கிறது. இதனால் உண்ணும் உணவு சரியாக செரிமானமாகி உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது.
ஓமத்தில் தைமால் எனப்படும் வேதிப்பொருள் இருக்கிறது. அதனால் இது வயிற்று வலி, அல்சர், ஆஸ்மா, தலைவலி, மூட்டு வலி, இருமல் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் அருமருந்தாக செயல்படுகிறது. ஜீரணக் கோளாறு, வாயு தொல்லையில் இருந்து விடுபட ஓம வாட்டர் குடிப்பது இன்றும் நம் வழக்கத்தில் இருக்கும் மருத்துவ முறை. அரை ஸ்பூன் ஓமத்தை இரண்டு சிட்டிகை உப்புடன் அரைத்து அரை டம்ளர் நீரில் கலக்கி ஒருவேளை மட்டும் பருக அஜீரணம் சரி ஆகும்.
பிரசவித்த பெண்களுக்கு செய்யப்படும் லேகிய வகைகளில், மருந்து குழம்புகளில் ஓமம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பிரசவித்த பெண்ணின் உடலில் உள்ள தேவையற்ற நீர் வற்றும். பால் பெருகும்.
நுரையீரல் மாசுகளை அகற்றும் சதகுப்பை: இதயத்திற்கும் நன்மை தரும் மூலிகை சதகுப்பை. இது மலத்தை கட்டும். இதன் வேரும் விதைகளும் மருந்தாகப் பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் முதலியவற்றை போக்கும் மருத்துவ குணமுடையது. சதகுப்பை சூரணத்துடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர பசியின்மையை போக்கும். இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் உள்ள மாசுகளை அகற்றும்.
சதகுப்பை பொடியை வெந்நீரில் ஊற வைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், பெரியவர்களுக்கு உண்டாகும் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் அனைத்தும் குணமாகும். இதை நிழலில் உலர்த்தி பொடித்த இலைப் பொடியை சிறிது சர்க்கரையுடன் கலந்து கொடுக்க தலை வலி, காது வலி, பசி மந்தம், கீழ்வாய்க் கடுப்பு, மூக்கில் நீர்ப் பாய்தல் முதலியவை குணமாகும்.
சதகுப்பை இலை, பூ போட்டு காய்ச்சிய குடிநீரை குடிக்கக் கொடுக்க பிரசவித்த பெண்களின் குருதிச் சிக்கலை அகற்றி வெளியேற்றும். சதகுப்பை விதையை திப்பிலி ஜீரகத்துடன் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட கருப்பை பலம் பெறும்.