வாழை மரம் என்பது காலம் காலமாக நம் வாழ்வோடு இணைந்து மனித குலத்திற்கு பல நன்மைகள் புரிந்து வரும் ஓர் அழகான மரம் எனலாம். இம்மரம், இதன் பூ, காய், இலை, தண்டு என அனைத்துப் பாகங்களும் சமையல் உள்பட பல வகைகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது. வாழை இலையிலிருந்து நாம் பெறும் ஐந்து நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* விருந்துகளிலும் விசேஷ நாட்களிலும் நாம் வாழை இலையில் உணவு உண்கிறோம். வாழை இலையில் இயற்கையான ஆன்டி மைக்ரோபியல் குணம் உள்ளது. உண்ணும் உணவின் சுவையையும் அதிகரிக்கச் செய்யக்கூடியது வாழை இலை.
* மீன் துண்டுகளை வாழை இலையில் சுற்றி ஆவியில் வேக வைக்கவும், க்ரிலில் வைத்து சமைக்கவும் முடியும். புட்டு மாவை வாழை இலையில் வைத்து ஆவியில் வேக வைக்கலாம். சோளமாவில் தயாரிக்கப்படும் டாமலே (Tamale) என்ற லத்தீன் அமெரிக்கன் உணவை வாழை இலையில் சுற்றி ஆவியில் வேக வைத்து உண்பதுண்டு. இதனால் அந்த உணவில் சுவை கூடுவதாகவும் கூறப்படுகிறது.
*வாழை இலை மக்கும் தன்மை கொண்டுள்ளதால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடிய பிளாஸ்டிக்கினால் செய்யப்படும் 'யூஸ் அன்ட் துரோ' வகையிலான பிளேட்களுக்குப் பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்தி பிளேட்கள் தயாரிக்கலாம்.
* சொரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு வாழை இலையிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. வாழை இலையிலிருக்கும் லிக்னின் (Lignin) என்ற பொருள், சூரியக் கதிர்வீச்சுக்களிலிருந்து நம் சருமத்தைக் காப்பதற்கு உதவும் பொருட்களின் தயாரிப்பில் ஒரு முக்கிய கூட்டுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
* வெட்டுக் காயம் மற்றும் தீப்புண்கள் மீது கட்டுப் போடும்போது வாழை இலை உபயோகித்தால் குளிர்ச்சி கிடைக்கும். கொப்புளங்கள் மீது தேங்காய் எண்ணெய் தடவி அதன் மீது வாழை இலையால் கட்டுப்போடுவதும் சீக்கிரம் குணம் கிடைக்கச் செய்யும். வாழை இலைகளின் பயனறிந்து அவற்றை உரிய முறையில் உபயோகித்து பயன் பெறுவோம்.