தோசைகளில் கேழ்வரகு தோசை, கருப்பு உளுந்து தோசை, தக்காளி தோசை, பாசிப்பயறு சேர்த்து பச்சை நிற தோசை என பல வண்ணங்களில் தோசை செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால், ஊதா நிற தோசை சாப்பிட்டிருக்கீங்களா? வாங்க, தோசைக்கு ஊதா நிறம் எப்படி கிடைக்கிறது, அதை தயாரிப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
நம் வீட்டைச் சுற்றி சாதாரணமாக வளர்ந்து படர்ந்து கிடக்கும் ஒரு வகை மூலிகை கொடியை ஊதா நிற பூக்களோடு பார்த்திருப்போம். அதுதான் சங்கு புஷ்பம் கொடி. இதன் பூக்களைச் சேர்த்து ஊதா நிறத்தில் தோசை சுட்டு உண்பதுதான் சமீபத்திய ட்ரெண்ட். நெட்டிசன்களிடையே தற்போது பேசு பொருளாக இருப்பதும் இதுவே.
பட்டர்ஃபிளை பீ ஃபிளவர் (Butterfly Pea Flower) எனக் கூறப்படும் சங்கு புஷ்பத்தை உபயோகித்து மூலிகை டீ தயாரித்து குடித்து வந்தோம். அது பல உடல் நலக் கோளாறுகளுக்கு தீர்வளிக்க வல்லது. அதன் ஆன்டி ஆக்சிடன்ட் குணமானது முடி மற்றும் சருமத்துக்கு நன்மை தரக்கூடியது. அதிலுள்ள அஸிடைல்கோலைன் (Acetylcholine) என்ற பொருள் மூளை ஆரோக்கியத்திற்கும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவக்கூடியது.
சங்கு புஷ்பத்தில் உள்ள அதிகளவு பெப்டைட்ஸ் மற்றும் க்ளோரைட்ஸ் என்ற பொருட்கள் கேன்சரை குணமாக்கும் தன்மை கொண்டவை. எனவே, இப்பூக்கள் கேன்சரை குணமாக்கும் மருத்துவத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பூக்கள் உடல் வலி, உயர் இரத்த அழுத்தம், டயாபெட் மற்றும் ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு போன்ற இதர நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
இப்பூக்களை உணவுகளில் ஒரு கூட்டுப் பொருளாக சேர்த்து உண்பதால், சுலபமாக சரிப்படுத்தப்படக்கூடிய சில பக்கவிளைவுகள் வரும் வாய்ப்பும் உள்ளது. என்றாலும் இவற்றை தயக்கமின்றி உண்ணலாம். இனி, இப்பூக்களை உபயோகித்து எவ்வாறு தோசை செய்யலாம் என்பதைப் பார்ப்போம்:
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும். அதில் சங்கு புஷ்ப பூக்களை சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். பாத்திரத்தில் உள்ள தண்ணீர் அடர் ஊதா நிறமாக மாறியிருக்கும். பூக்களை அகற்றிவிட்டு நீரை வடிகட்டி எடுக்கவும். அதில் தோசை மாவை கலந்து தோசைகளை சுட்டெடுக்கவும்.
தோசை மாவிலுள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரதச் சத்துக்களோடு பூவின் சத்துக்களும் சேர்ந்து ஆரோக்கியம் நிறைந்த ஊதா நிற தோசை தயார். இந்த தோசையை விரும்பிய சட்னியோடு சேர்த்து சாப்பிடலாம்.