

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்துக்கும் தனித்துவமான சிறப்பு இருந்தாலும், அதிகாலை நேரம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இரவு முடியும் அதிகாலை நேரம், நிசப்தமான சூழல் நிலவும். இயற்கையின் சாந்தமான நேரம் மனதிற்கு அமைதியை அளிக்கும். அந்த நேரத்தில் வீசும் இளம் தென்றல் மலை முகடுகளில் இருந்து வரும். அந்தக் காற்றில் மருத்துவ குணம் நிறைந்திருக்கும். அந்த காலை இளம் தென்றல் நம் உடலில் பட்டால் நாடி நரம்புகள் பலம் பெறும். உடல் குளிர்ச்சி அடையும். உடலில் சக்தி அதிகரிக்கும். நமது செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். நமது புலன்கள் உணர்ந்து செயல்படும். எனவே சூரியோதயத்திற்கு முன்பே தூக்கம் களைய வேண்டும். எழுந்து நம் கடமைகளையும் தொடங்க வேண்டும்.
விழித்தெழ வேண்டிய நேரம்: அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுவது நமது ஆரோக்கியத்திற்கும், செயல்களுக்கும் மட்டுமல்லாது ஆயுள் அதிகரிப்பதற்கும் நல்லது. அதிகாலை எழுதல் நல்ல பழக்கமாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அடிப்படை வழிமுறையாகவும் விளங்குகிறது. உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற செயல்களைச் செய்யவும், மன அமைதியை பெறவும் இந்த நேரம் மிகச் சிறந்ததாகும்.
யோகிகளும், ஞானிகளும் அதிகாலை 3 மணிக்கே விழித்து எழுகிறார்கள். இது நான்காம் சாமத்தின் தொடக்கம் ஆகும். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. ஆகவேதான் பொதுவாக மனிதன், அதிகாலை 4 1/2 மணியிலிருந்து 5 மணிக்குள் எழுந்திட வேண்டும் என்பது விதி. அதிகாலை முகூர்த்தம் மிகவும் விசேஷமானது.
எவ்வாறு எழுந்திருக்க வேண்டும்: நம் முன்னோர்கள் தூக்கத்தில் இருந்து எழுவதற்கு விதிமுறைகள் வகுத்துள்ளனர். கண் விழித்தவுடன் முதலில் உடலை நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும். பின்னர், மெல்ல வலது புறமாகத் திரும்பி படுத்து எழ வேண்டும். மனம்தான் நமது உடலின் தூண். மனது நேராக நிற்கவில்லை என்றால் நமது செயல் திறன் குறையும். சிலர் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், எனக்கு அலுப்பாக உள்ளது. இன்றைக்கு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுவார்கள். இதற்கு காரணம் மனது ஒரு நிலையில் இல்லை என்று அர்த்தம். இவ்வாறு இருந்தால் எதுவும் நிலையாக இருக்காது. மனது ஒரு நிலையில் இருக்க தூக்கச் சோம்பலில் இருந்து உணர்வுகளை சரிசெய்திட வேண்டும்.
விழித்தெழுந்த பின் செய்வது: தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். பின்னர் மெதுவாக உள்ளங்கைகளை விரித்துத் தேவியை வணங்க வேண்டும். நாம் கைகளின் உதவியால்தானே அனைத்தையும் செய்கிறோம். எனவே கைகளுக்கு வலிமையை தருகின்ற தேவியை வணங்கிட வேண்டும்.
அதிகாலை வேளையில் வாயு ஸ்பரிசத்தினால் அதிக உணர்வு கிடைக்கிறது. உடலின் சோம்பல் தன்மை நீங்கி செயல்திறன் அதிகரிக்கும். தேவியை வணங்கிய பின் மெதுவாகக் குனிந்து பூமா தேவியை தொட்டு வணங்க வேண்டும். இதற்கான நோக்கம் பூமி சர்வ சராசரங்களின் மாதா. முதலில் மாதாவை வணங்க வேண்டும் என்பது விதியாகும். மற்றொரு விஷயம் நாம் படுத்து உறங்கும் போது உடல் அசுத்தமடைகிறது. பூமியைத் தொட்டுத் தலையில் வைக்கும் போது சுத்தமான சக்தி உடலில் பாய்கிறது. அதனால் சக்தி அதிகரிக்கிறது. நாம் நமது பணிகளைச் செய்வதற்கான உற்சாகம் உண்டாகிறது. பூமித் தாயின் கருணைக் கடாட்சம் நமது சரீரத்திற்குக் கிடைக்கிறது.
மொத்தத்தில், அதிகாலை நேரம் உடல் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் ஒருங்கே வழங்கும் இயற்கையின் அரிய வரமாகும். இந்த நேரத்தை முறையாக பயன்படுத்தும் பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உறுதியான அடித்தளமாக அமைகிறது.