'ஸ்ட்ரெஸ்'ஸா இருந்தா அதிகமா சாப்பிப்பிடுவோமா?

Stressed women and over eating women
Over eating food
Published on

சோகமாக, மன வருத்தத்தில் இருக்கும் ஒருவர் அதிகமாக சாப்பிடுவார். பொதுவாக, அதீத உடல் பருமனுடன் உள்ள ஒரு நபரிடம் கேட்டால், ‘’என்னுடைய கவலையே என்னை அதிகமாக சாப்பிடத் தூண்டியது. அதனால்தான் என் உடல் எடையும் தாறுமாறாக ஏறிவிட்டது’’ என்று பதில் சொல்வார். அறிவியல் ரீதியாக இது உண்மை. மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவருக்கு அதிகமாக சாப்பிட தோன்றுவது இயற்கையே.

கவலையில் அதிகமாக உண்பதன் அறிவியல் காரணங்கள்: ஒருவர் சோகம், கவலை, அவமானம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆட்படும்போது தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நினைக்கிறார். தன்னிடம் உள்ள எதிர்மறையான எண்ணங்களை விலக்கவும், சோகமான உணர்வுகளை தடுக்கவும் நினைக்கிறார். அப்போது அவருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

அந்த சமயத்தில் அவரது உடலில் கார்டிசோல் என்கிற ஹார்மோன் வெளிப்படுகிறது. அது அவரது மன அழுத்தத்தை சம நிலையில் வைப்பதற்கு உதவுகிறது. அதேசமயம் அது பசியைத் தூண்டி விட்டு, இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளுக்காக ஏங்க வைக்கிறது. எனவே, அவர் உணவு வகைகளை குறிப்பாக நொறுக்கு தீனிகளையும் அதிகமாக சாப்பிடுகிறார்.

அவருக்கு உணவு ஒரு வடிகாலாக அமைகிறது. அதனால் நிறைய உண்கிறார். அது பசியை தீர்ப்பதுடன் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அப்போது மூளை செரோடோனின் என்கிற ஒரு பொருளை வெளியிடும். அதிகளவு கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்பு நிறைந்த உணவு வகைகள் செரட்டோனின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, அதிகமாக உண்ணுகிறார்.

அது அவரது மனநிலையை சந்தோஷமாகவும், அமைதியாகவும் ரிலாக்ஸ்டாகவும் வைக்கும். அவர் மனதில் உள்ள சோகம், துயரம், கோபம், பயம், தனிமை, அவமானம் போன்ற உணர்வுகளை அது தற்காலிகமாக தடுத்து நிறுத்தும்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம்! டாக்டர்கள் பரிந்துரைக்கும் 'பெண்களின் பழம்'
Stressed women and over eating women

அதிகமாக உண்பதன் பாதிப்புகள்: சோகத்தில் உண்ணும் ஒருவர் சத்தான, உணவுகளை உண்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. துரித உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த பேக்கரி வகை உணவுகள், பிரியாணி வகைகளை அதிகமாக உண்கிறார். அது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. எனவே, கவலையை போக்க உணவுகளை நாடாமல், பிடித்த நபர்களுடன் இருப்பது மனம் விட்டுப் பேசுவது, பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது என்று மனதை திசை திருப்புவது மிகவும் அவசியம்.

-எஸ்.விஜயலட்சுமி

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com