தாயாகும் பெண்கள் கவனத்திற்கு: மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம் - பகுதி 1 - குடும்பநல மருத்துவர் வழங்கும் நம் தினசரி வாழ்வுக்குப் பயனளிக்கும் மருத்துவ குறிப்புகள். அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள், படித்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள்...
Women health tips | ஆரோக்கிய வாழ்வு
Women health tips | ஆரோக்கிய வாழ்வுAI Image
Updated on

ஆரோக்கியமே ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வம். அந்தச் செல்வத்தை எளிய முறையிலும், இயற்கையான வழியிலும் எவ்வாறு பாதுகாப்பது என்பதை உணர்த்தும் ஒரு வழிகாட்டியே இந்தத் தொகுப்பு.

டாக்டர் ஆர். பார்த்தசாரதி அவர்களால் தொகுக்கப்பட்ட இந்த மருத்துவக் குறிப்புகள், நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சிறு சிறு உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்கவும், நீண்ட ஆயுளுடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ உதவும் எளிய வழிமுறைகளை வழங்குகின்றன.

அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள், படித்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பெண்களுக்காக…

1. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

2. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

3. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

4. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? ஒரே நேரம் அதிகமாக உண்பதைவிட, அடிக்கடி, அளவாக சாப்பிடுவது நல்லது. மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் சில நாட்கள், பொரித்த உணவு வகைகள், அதிகம் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை குறைத்தால், வயிறு உப்புவது , மார்பகங்கள் கனப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.

5. நார்சத்து அதிகம் உள்ள காய்க்கறிகள், பழவகைகள், சிறுதானியம் உள்ள உணவு வகைகள் அதிகமாக உண்ணவேண்டும். காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம் .

6. ஒரு நாளில் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது நடைபயிற்சியாகவோ, நடனமாகவோ, மிதி வண்டிஓட்டுதல், நீச்சல் போன்ற உங்களுக்கு முடிந்த விருப்பமுள்ள எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Pregnancy care | ஆரோக்கிய வாழ்வு
Pregnancy care | ஆரோக்கிய வாழ்வுAI Image

கர்ப்பக் கால கவனிப்பு..!

7. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!

8. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

9. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்

10. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

11. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

12. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

13. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

14. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

15. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

16. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

17. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

18. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக் கூட கொண்டு வரக்கூடும்.

19. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

20. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

21. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

22. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

23. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

24. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

பகிருங்கள்..... பலருக்கும் உபயோகப்படலாம்...!

logo
Kalki Online
kalkionline.com