

கடுக்காய் தூள் மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை சித்த மருத்துவ மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகளை நீக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த இயற்கை கலவையாகும். எனினும் இவற்றை சரியான அளவில் உட்கொள்வதும், யார் தவிர்க்க வேண்டும் என்பதை அறிவதும் மிகவும் அவசியம்.
முக்கியமாக கடுக்காய் தூளை வாங்கும் போது அதன் கொட்டை நீக்கப்பட்டு, தோல் மட்டுமே பொடி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் கடுக்காய் கொட்டை நச்சுத்தன்மை வாய்ந்தது.
கடுக்காய் தூள்:
தினமும் இரவு உணவிற்குப் பின்பு 1/2 டீஸ்பூன் முதல் 1 டீஸ்பூன் வரை (சுமார் 2 கிராம் வரை) எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஒரு கிளாஸ் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் வரை சாப்பிடலாம். கடுக்காயை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து எடுக்கக் கூடாது. எனவே ஒரு மண்டலம் சாப்பிட்ட பிறகு சில வாரங்கள் இடைவெளி விடுவது நல்லது.
உலர்ந்த திராட்சை:
தினமும் 10 முதல் 15 திராட்சைகள் (சுமார் 20-30 கிராம் அளவு) சாப்பிடலாம். இவற்றை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை குடித்துவிட்டு திராட்சையை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
யார் தவிர்க்க வேண்டும்?
இந்த இரண்டுமே ஆரோக்கியமானது என்றாலும், குறிப்பிட்ட நபர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடுக்காய் தூளைத் தவிர்க்க வேண்டியவர்கள்:
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்:
கடுக்காய் உடலின் கீழ்நோக்கிய ஆற்றலை (வாதத்தை) தூண்டும் என்பதால் கர்ப்பிணிகள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தி சிக்கல்களை உண்டாக்கலாம்.
சர்க்கரை நோய் மருந்துகள் எடுப்பவர்கள்:
கடுக்காய் இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே ஏற்கனவே சர்க்கரை நோய்க்கு மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், சர்க்கரை அளவு மிகவும் குறைந்து விடக்கூடும். எனவே இவற்றை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் வறட்சி மற்றும் அதிக சோர்வு உள்ளவர்கள்:
கடுக்காய் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. கடுக்காயின் துவர்ப்புத் தன்மை உடலை மேலும் வறட்சி அடைய செய்யும் என்பதால் தீவிர உடல் வறட்சி, உடல் சோர்வு, அதிக உடல் பலவீனம் உள்ளவர்கள் அல்லது நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) உள்ளவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள்:
இது இயற்கையிலேயே ஒரு மலமிளக்கி (laxative) என்பதால் வயிற்றுப்போக்கு அல்லது சீதபேதி உள்ளவர்கள் இதைச் சாப்பிடக்கூடாது.
ஆண்கள்:
சில ஆய்வுகளின்படி, கடுக்காய் அதிக அளவில் நீண்ட காலம் எடுப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
உலர்ந்த திராட்சையை தவிர்க்க வேண்டியவர்கள்:
தீவிர சர்க்கரை நோயாளிகள்:
உலர்ந்த திராட்சையில் இயற்கை சர்க்கரையும் கலோரிகளும் அதிகம். எனவே சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் (நீரிழிவு நோயாளிகள்) இதனைத் தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவர் கூறும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே எடுக்க வேண்டும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்:
இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் என்பதால் உடல் எடையைக் குறைக்க தீவிர டயட்டில் இருப்பவர்கள் அளவோடு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்:
இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால், நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன் ஏதேனும் குறிப்பிட்ட நோய்க்கு தொடர் சிகிச்சை பெற்று வருபவர்களும் மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை எடுத்துக் கொள்ளக்கூடாது.
செரிமானக் கோளாறு உள்ளவர்கள்:
அளவுக்கு அதிகமாக திராட்சை சாப்பிட்டால் அதில் உள்ள நார்ச்சத்தின் காரணமாக வயது உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் வயிற்று வலி ஏற்படலாம்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference