மழைக்காலம் வந்துவிட்டால் போதும், வீட்டில் உள்ள அனைவருக்குமே சளி, இருமல், காய்ச்சல் என பல பிரச்னைகள் வந்துவிடும். இதிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது. இதற்காக பலர் பலவிதமான மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், ஒரு வாரமாவது நம்மை பாடாய்ப் படுத்திவிட்டுதான் செல்லும். இத்தகைய பிரச்னைகள் வராமல் இருக்கவும், ஒருவேளை வந்துவிட்டால் அதை உடனடியாக சரி செய்யவும் கண்டந்திப்பிலி ரசம் உதவுகிறது. அதன் செய்முறை எப்படி என இந்தப் பதிவில் பார்க்கலாம். இது தவிர இந்த ரசத்தை சூப் போலவும் குடிக்கலாம். சுவை நன்றாக இருக்கும்.
கண்டந்திப்பிலிக்கு செரிமானத்தை சரி செய்யும் சக்தி உண்டு. மூலிகை வகைகளில் கண்டந்திப்பிலி மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகும். இதில் செய்யப்படும் ரசித்துக்கு இருமல், சளி தொந்தரவை விரட்டியடிக்கும் ஆற்றல் உள்ளது. இதில் சிறிதளவு நெய் சேர்த்துத் தாளித்து ரசம் வைத்துப் பருகினால், சளி இருந்த இடம் தெரியாமல் போகும்.
தேவையான பொருட்கள்: புளி - எலுமிச்சம் பழம் அளவு, நெய் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், கண்டந்திப்பிலி - அரை கப் பொடியாக நறுக்கியது.
செய்முறை: முதலில் புளியை இரண்டு கப் அளவுக்கு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்னர் அதில் பெருங்காயத் தூளை சேர்த்து, ரசப்பொடியைப் போட்டு சிறிது நேரம் கொதித்த பிறகு, கண்டந்திப்பிலி இலைகளை, நெய் மற்றும் கடுகுடன் சேர்த்து வதக்கி ரசத்தில் சேர்த்து தாளிக்கவும்.
இதை கொதிப்பதற்கு முன்பாகவே இறக்கி வைத்துவிட வேண்டும். பின்னர் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்தால், அவை விரைவில் குணமாகும்.