மழைக்கால உடல் பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும் கஷாயங்கள்!

Rainy season Kashayam
Rainy season Kashayam
Updated on

ழை, பனிக்காலம் என்றாலே சளி, ஜுரம், தொண்டை க்கட்டு, பசியின்மை போன்ற பிரச்னைகள் நம்மை கஷ்டப்படுத்தி விடும். இதைத் தடுக்க வீட்டிலிருந்தே எளிய முறையில் கஷாயங்கள் தயாரித்து அருந்தி வர மழைக்கால பிரச்னைகளை சமாளிக்கலாம்.

தொண்டைக்கட்டு, கரகரப்பு குணமாக: துளசி 1 கைப்பிடி, ஓமவல்லி இலைகள் 6, மாவிலை 2, தூதுவளை கீரை 1 கைப்பிடி இவற்றை நன்கு கழுவி சிறிதாக நறுக்கவும். மிளகு, சீரகம் 1 டீஸ்பூன் எடுத்து வறுத்து பொடிக்கவும். நன்றாகக் கொதித்த பின் ஒரு டம்ளர் கஷாயத்திற்கு தேன் 1 டீஸ்பூன் சேர்த்து மெதுவாக அருந்தி வர தொண்டைக்கட்டு, கரகரப்பு குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க: பனங்கற்கண்டு1 டேபிள் ஸ்பூன், மிளகு 2 டீஸ்பூன், சுக்குப்பொடி 1 டீஸ்பூன், அரிசித் திப்பிலி 5, ஏலம் மூன்று, கிராம்பு 3 இவற்றில் பனங்கற்கண்டு தவிர மற்றவற்றை மிக்ஸியில் பொடிக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீரில் பனங்கற்கண்டு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, பிறகு பொடி தேவைக்கு சேர்த்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி அருந்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இருமல் நீங்க: சிறு துண்டு சுக்கு, அதிமதுரம் 2 குச்சிகள், சித்தரத்தை 2, உடைத்த மிளகு 2 டீஸ்பூன், கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் 2, வால் மிளகு அரை டீஸ்பூன் இவற்றை நன்கு பொடித்து வைக்கவும். இந்தப் பொடியில் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பாதியாக ஆனதும் இறக்கி அதில் பனங்கற்கண்டு சேர்த்து சூடாக அருந்த, இருமல் குணமாகும். வறட்டு இருமல் இருந்தாலும் நன்கு குணம் கிடைக்கும்.

மழை, குளிர் காலங்களில் பொதுவாகவே வயிறு மந்தமாக இருக்கும். ஜீரணமாக தாமதமாகும். இதற்கு கொத்தமல்லி விதை 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன் மிக்ஸியில் பொடித்து இத்துடன் அரை டீஸ்பூன் சுக்குப் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக ஆனதும் இறக்கி வடிகட்டி சூடாக இருக்கும்போதே மெல்ல அருந்த வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் நீங்கும். வயிறு சுத்தமாகும்.

இதைத் தவிர துளசி, ஓமவல்லி, வெற்றிலை இலைகளை சேர்த்து நன்கு தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறியதும் பருக நுரையீரல் சளி, தலைபாரம், நீர்க்கோவை போன்றவை குணமாகும்.

logo
Kalki Online
kalkionline.com