தூதுவளை என்பது கொடி இனத்தைச் சேர்ந்த மூலிகைகளில் முதன்மையான ஒன்று. ஏனெனில், தூதுவளைக் கொடியின் வேர் முதல் பழம் வரை எல்லாமே மருத்துவக் குணம் மிகுந்தவை. இதன் இலை, தண்டு என உடல் முழுவதும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்திலும், பழங்கள் அடர்ந்த சிவப்பு நிறத்திலும் இருக்கும். தூது, தூதுளம், தூதுளை, தூதுவளை, கொடிவழுதலை என்றெல்லாம் இதற்குப் பெயருண்டு.
இந்த மூலிகையின் சிறப்பம்சம் இந்த இலைகளின் மேற்புறம் காணப்படும் முட்கள்! இலைகளின் முன்புறம் வளைந்த முற்களைக் கொண்டதால் அமைந்த பெயரே தூதுவளை! (வளை - என்பது இங்கு முள்ளைக் குறிக்கும்).
பயன்பாடுகள்:
* தூதுவளை இலையை நெய்யில் வதக்கி உண்டு வரக் கபக்கட்டு நீங்கி, உடல் பலம் பெறும்.
* தூதுவளை இலைகளை ஆய்ந்து உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்து சாப்பிட, எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் ஓடிவிடும்.
* இதன் இலையும், பூவும் கோழையை அகற்றவும், உடலைப் பலப்படுத்தவும், காமத்தைப் பெருக்கவும் செய்யும். இதன் காய், பழம் பசியைத் தூண்டும், மலச்சிக்கலைப் போக்குகிறது.
* தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 தம்ளர் பசும்பாலில் கலந்து தினமும் காலையில் மட்டும் குடித்து வர, நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.
* தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து வற்றலாகப் பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலப் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.
* தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 தம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முக வசீகரம் பெறலாம்.