நாம் சமையலில் பயன்படுத்தும் மிளகு 145 மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்பது தெரியுமா? உலகளவில் மிளகு உற்பத்தியில் இந்தியா நான்காம் இடத்தில் இருந்தாலும், உலகத்திலேயே காரம், மனம், குணத்தில் முதலில் நிற்பது இந்திய மிளகுகள்தான். ‘பைப்பரேசியே’ எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மிளகு, கறுப்புத் தங்கம் என்று போற்றப்படும் அருமருந்து.
மிளகில் கருமிளகு, வால் மிளகு என இரு வகைகள் உண்டு. மிளகுக்கு குறுமிளகு, கோளகம் என்ற பெயர்களும் உண்டு. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் உருவாகிறது. பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கருமிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு.
இதில், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தையமின், ரிபோபுளேவின், நியாசின் முதலிய தாதுப்பொருட்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன. மிளகிற்கு காரம் பொது குணம், ஆயினும் உடலுக்கு குளிச்ச்சியைத் தந்து சளியை போக்கும். அதேசமயத்தில் உடல் சூட்டையும் கொடுத்து அதிஉஷ்ணத்தைத் தடுக்கும் தன்மையும் கொண்டது. இதனால் மிளகு நெஞ்சுச்சளி, நுரையீரல், செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. சுவாசக் குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கி, சைனஸ், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளைப் போக்குகிறது.
‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்பது பழமொழி. உணவில் உள்ள நச்சை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு. மிளகு, உடலில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பிற செரிமான அமிலங்கள் அதிக அளவு சுரக்க உதவுகின்றது. இதிலுள்ள பெப்பரைன் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
மிளகில் இருக்கும் பெப்பரைன் இரத்தக் கொதிப்பை சீரான அளவில் வைத்திருக்க உதவும். இது புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இதிலுள்ள செலினியம், குர்குமின், பீட்டா கெரட்டின், வைட்டமின் பி போன்றவை குடல் பகுதிகளில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது.
மிளகிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அன்றாடம் மிளகு ரசம் உண்டால் வயிற்று உபாதைகள், சுவாச நோய்கள் வராமல் இருக்கும். மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். அசைவ உணவு சமைக்கும்போது கடைசியாக ஒரு தேக்கரண்டி மிளகுப் பொடி சேர்ப்பது உணவுக்கு நல்ல சுவையையும், மணத்தையும் தருகிறது. மிளகு சேர்த்து சமைக்கின்ற உணவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாது.
பொதுவாக, சமையலில் காரத்திற்கு மிளகாய்க்கு பதிலாக மிளகை பயன்படுத்துமாறு உணவியல், ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல்நலப் பிரச்னைகள் தீர அன்றாடம் அரை கிராம் மிளகுப் பொடியை வெதுவெதுப்பான நீரில் பருகி வர பசி உண்டாகும். உமிழ்நீரைப் பெருக்கி உணவு செரிக்க இது உதவுகிறது. மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து, 1 கிராம் இருவேளை வெந்நீரில் கலக்கி குடித்து வர செரியாமை நீங்கி, வயிற்று நோய்கள் நீங்கும்.
சளியினால் ஏற்படும் இருமலுக்கு மிளகு நீரில் பனம் சர்க்கரை சேர்த்துக் குடித்து வர குணம் தெரியும். அதிகமாக சளித் தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரைத் தேக்கரண்டி முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும். உடல் சூட்டினால் வரும் இருமலுக்கு மிளகுப் பொடியை பனைவெல்லத்தில் சேர்த்து பிசைந்து சிறிதளவு 2, 3 நாட்கள் சாப்பிட இருமல் நீங்கும்.
ஞாபக மறதி, உடல் சோம்பல், சளித் தொந்தரவுகளுக்கு மிளகுப் பொடியை தேனுடன் கலந்து இருவேளை எடுத்து வர பலன் தெரியும். சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு ஆகியவற்றை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும். மிளகைத் தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும்.
மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். இருமல் தொந்தரவு இருந்தால் தேநீர் அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டுக் குடிக்க இருமல் பிரச்னை நீங்கும். சிறிது மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.
மிளகைக் கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும். மிளகுடன் உப்புச் சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறு வலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
கால் தேக்கரண்டி மிளகுப் பொடியை மோரில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் சரியாகும். மிளகு வாய்வு பிரச்னைகளை நீக்கும். மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.
ஒரு தேக்கரண்டி மிளகை வறுத்துப் பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து, தேன் கலந்து சாப்பிட வர பசியின்மை குணமாகும். வயிற்று உப்புசம் குணமடையும். மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்த விழுதை சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் செரிமானக் கோளாறு நீங்கும். ஏழு, எட்டு மிளகை ஒரு குவளைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்தத் தண்ணீரைக் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது. தினமும் பத்து மிளகை உண்டு வர இரத்தம் சுத்தமாகும். கனிந்த வாழைப் பழத்தின் உள்ளே மிளகுப் பொடியை வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் விரைவில் ஆஸ்துமா நோய் குணமாகும்.