இரத்த சோகை நோயிலிருந்து நிவாரணம் தரும் காளான் உணவுகள்!

காளான்கள்
காளான்கள்
Published on

ழை பெய்து விட்டதும் வீட்டுத் தோட்டம் முதலான இடங்களில் சின்னச் சின்னக் காளான்கள் முளைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். காளான்கள் பூமிக்குக் குடை பிடிப்பதைப் போலக் காட்சியளிக்கும். பார்ப்பதற்கு அவை சின்னஞ்சிறு குடையைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இப்போது நாம் காளான்களைப் பற்றிய தகவல்களை நாம் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

காளான் என்பவை மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம்.  தாவரங்களுக்கும் காளான்களுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. தாவரங்களுக்கு இலைகள் அமைந்திருக்கும். ஆனால், தாவரங்களுக்கு அமைந்திருப்பதைப் போல காளான்களுக்கு இலைகள் ஏதும் கிடையாது. தாவரங்களைப் போல காளான்கள் பூப்பதில்லை. காளான்களின் உடலில் க்ளோராஃபில் எனும் பச்சையம் அமைந்திருக்கவில்லை. இதன் காரணமாக இவற்றால் தாமாகவே தமக்கு வேண்டிய உணவைத் தயாரிக்க இயலாது. காளான்கள் அழுகிய நிலையில் காணப்படும் உணவுப் பொருட்கள் பிற தாவரங்கள் போன்றவற்றிலிருந்து தங்களுக்கு வேண்டிய சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளுகின்றன. தாவரங்கள் விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. காளான்கள் ஸ்போர் எனும் ஒருவகை விதை மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.

காளான் இனத்திலும் ஏராளமான வகைகள் இருக்கின்றன. காளான் இனத்தில் சுமார் 80,000 வகைகள் உள்ளன என்று தாவரவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். காளான்கள் பலவிதமான வடிவங்களில் காணப்படுகின்றன. சில வகை காளான்கள் நுண்ணோக்கிகளின் உதவியால் பார்க்கும் அளவிற்கு மிக நுண்ணிய அளவில் அமைந்துள்ளன. வேறு சில காளான்கள் மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றன.  பஃப்பால் எனும் ஒரு வகைக் காளான்கள் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளன.

காளான்களில் மனிதர்களுக்கு நன்மை விளைவிக்கும் காளான்கள் மற்றும் தீமை விளைவிக்கும் காளான்கள் என இரண்டு வகைகள் காணப்படுகின்றன.  காளான்களால் மிக முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. இவை மரங்களிலிருந்து கீழே உதிர்ந்து விழுந்த இலைகள் போன்றவற்றை மக்கச் செய்து அவற்றை மண்ணோடு மண்ணாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும், சில வகைக் காளான்கள் நமக்கு உணவாகவும் பயன்படுகின்றன. காளான் இனத்தில் சில வகைக் காளான்கள் மட்டும் நச்சுத்தன்மை மிக்கதாக உள்ளன. எனவே, காளான்களை நாம் சாப்பிடப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த 7 உணவுகள் அவசியம்!
காளான்கள்

இனி, காளான்களால் மனித குலத்திற்கு என்னென்ன நன்மைகள் என்பதைப் பற்றிப் பார்ப்போம். காளான்கள் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன என்பதைப் பற்றிப் பார்த்தோம். இது மட்டுமின்றி, காளான்கள் மருந்துகள் தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகின்றன. பெனிசீலியம் எனும் ஒருவகைக் காளானிலிருந்து பென்சிலின் என்ற மருந்தும், டெர்ரோமைசீலியம் எனும் ஒரு வகைக் காளானிலிருந்து டெரோமைசின் என்ற மருந்தும், ஸ்ரெக்டோ மைசீலியம் என்ற காளான் இனத்திலிருந்து ஸ்ரெப்டோமைசின் என்ற மருந்தும் தயாரிக்கப்படுகின்றன.

காளான்களில் தையமின், ரிபோப்ளோவின் மற்றும் நியாசின் போன்ற வைட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும், இதயத்திற்கு நன்மை பயக்கும் பொட்டாசியம் தாது இதில் உள்ளது. இது மட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் போன்ற சத்துக்களும் காளான்களில் காணப்படுகின்றன. இறைச்சியிலுள்ள அனைத்து வைட்டமின்களும் காளான்களிலும் காணப்படுகின்றன. காளான்களில் அமினோ அமிலம் நிறைந்துள்ளது. காளான்களில் கணிசமான அளவு செலினியம் தாது அடங்கி உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

நம்முடைய உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான சத்து புரதச் சத்தாகும். நமது உடலில் ஹார்மோன்களும், என்சைம்களும் புரதங்களால் உருவாக்கப்படுகின்றன. மேலும், நமது உடலில் உள்ள சுரப்பிகள் சரியாக இயங்க புரதச்சத்து மிகவும் அவசியமாகும். அழியும் செல்களைப் புதுப்பிக்க மற்றும் செல்கள் அழியாமல் காப்பாற்ற புரதச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். காளான்களில் இத்தகைய பயனுள்ள புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. மேலும், இரத்த சோகை, பெரிபெரி மற்றும் ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கவும் காளான்கள் உதவுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com