புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலாத் தலங்களில் வடமாநிலத்தவர் விற்கும் பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான தின்பண்டங்களில் ஒன்று பஞ்சு மிட்டாய். திருவிழா, பொருட்காட்சி, பூங்கா போன்ற இடங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாய், இப்போது திருமண மண்டபங்களிலும் சிறுவர்களை கவர்ந்து இழுக்கிறது. மோட்டார் உதவியுடன் சுற்றிவரும் அண்டா போன்ற பாத்திரத்தில் ரோஸ் நிறம் கலக்கப்பட்ட சர்க்கரையை கொட்டி, காற்றில் இறகென பறக்கும் பஞ்சை குச்சியால் சுற்றிப் பிடிக்கும்போதே சிறுவர்களுக்கு வாயில் நீர் ஊரும். இப்படிப்பட்ட பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள், புதுச்சேரி மாநில உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உணவகங்கள், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் உணவின் தரத்தை ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுக்கு, கடற்கரை பகுதிகளில் வடமாநிலத்தவர் விற்கும் பஞ்சு மிட்டாய் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவற்றை வாங்கி பரிசோதனை செய்தபோதுதான், ரோடமின் பி என்ற விஷத்தன்மை வாய்ந்த நிறமி சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள் அதிகாரிகள்.
RHODAMINE-B என்ற நிறமி துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வண்ணமேற்றவும், ஊதுபத்தி, தீக்குச்சிகளில் நிறம் சேர்ப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனக் கலவை. இதை உணவுப் பொருட்களில் சேர்த்தால், புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து இருப்பதால், இனி இந்த ரசாயனத்தை பயன்படுத்தினால், கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
பல ஆண்டுகளாக நாம் ஆசை ஆசையாய் வாங்கிச் சாப்பிடும் பஞ்சுமிட்டாயில் கூட இப்போது இதுபோன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்து வந்த பஞ்சுமிட்டாய் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வு குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில் எழும்பூரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ஆய்வறிக்கை வந்த பிறகு பஞ்சுமிட்டாய் விற்பனை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.