
என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும், உடல் ஆரோக்கியம் தான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆரோக்கியம் சீராக இல்லாவிட்டால், அத்தனையும் வீணாகிவிடும். அந்த வகையில் உடலுக்கு ஊடச்சத்து கொடுக்கும் உலர் பழங்களின் பொடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
உலர் பழங்களில் பலவித ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. நம் உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல்கள், நார்ச்சத்து என ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தும் அனைத்து சத்துகளும் உலர் பழத்தில் உள்ளன. அதனால்தான் பலரும் தங்கள் டயட்டில் உலர் பழங்களை விரும்பி சேர்த்துக் கொள்கிறார்கள். இவை நம் உடலுக்கு தேவையான சக்தியை தருவதோடு செரிமானத்திற்கும் உதவுகின்றன.
உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றில் நிறைய பொட்டாசியமும் நார்ச்சத்தும் உள்ளது. இவை நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
உலர் பழங்களை அளவாக சாப்பிட்டால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதை சாப்பிடும் போது சீக்கிரமாகவே நம் வயிறு நிறைவதோடு ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸை சாப்பிடுகிறோம் என்ற எண்ணமே ஏற்படாது. இதில் இரும்புசத்தும் காப்பரும் இருப்பதால், உங்களுக்கு விரைவான ஆற்றலை தருவதோடு மூளையையும் வேகமாக செயல்பட வைக்கிறது.
இதை தினசரி பலங்களாக சாப்பிட சிலர் மறந்துவிடுவார்கள். அதனால் இந்த உலர் பழங்களை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் கால்சியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்குமாம். இந்த உலர் பழப் பொடி உடலை சோர்விலிருந்து பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் அனைத்து வயதினருக்கும் நன்மை பயக்கும். காலையில் பாலில் கலந்து குடிப்பது நாள் முழுவதும் ஆற்றலை வழங்குகிறது, மேலும் இரவில் தூங்குவதற்கு முன் எடுத்துக் கொண்டால், அது உடல் மீட்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
மக்கானா - 1 கப்
வறுத்த பருப்பு (பொட்டுக்கடலை) - 1 கப்
பாப்பி விதைகள் - அரை கப்
பாதாம் - 1 கப்
உலர்ந்த பேரீச்சம்பழம் - அரை கப்
செய்முறை:
முதலில், ஒரு கடாயை மிதமான தீயில் சூடாக்கி, வறுத்த பொட்டுக்கடலையைச் சேர்த்து லேசாக வறுக்கவும். சிறிது மொறுமொறுப்பாக மாறியதும், அவற்றை எடுத்து தனியாக வைக்கவும். இப்போது அதே கடாயில் மக்கானா மற்றும் பாதாம் பருப்பைச் சேர்த்து, தொடர்ந்து கிளறிக்கொண்டே வறுக்கவும். மக்கானா லேசான பொன்னிறமாக மாறி, பாதாம் வறுத்ததும், அவற்றையும் வெளியே எடுக்கவும். இதற்குப் பிறகு, பேரிச்சையை எடுத்து, அதன் விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். பின்னர் பாப்பி விதைகள் மற்றும் நறுக்கிய பேரிச்சையை ஒன்றாக குறைந்த தீயில் வறுக்கவும். அனைத்து உலர் பழங்களையும் வறுத்த பிறகு, அவற்றை சிறிது ஆற விடவும். பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடி செய்யவும். இந்த பொடியை நீங்கள் தினசரி ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் மிகவும் நன்மை பயக்கும்.