கருப்பு உளுந்தில் நாம் இட்லி, தோசை மாவு அரைப்போம். அதைத் தவிர கருப்பு உளுந்தங் களி செய்வோம். அப்படிப்பட்ட கருப்பு உளுந்தில் பல சத்துக்களும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
செரிமான திறன்: கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுவது அவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலம் கட்டிக்கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது.
இரத்த சோகை: உணவில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் நோய் விரைவில் தீரும்.
எலும்புகள்: நமக்கு வயது ஏற ஏற நமது உடலில் உள்ள எலும்புகளும் மூட்டு பகுதியிலும் வலிமை குன்றி உடல் இயக்கத்தை குறைத்து விடும் ஆபத்து உள்ளது. கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்ரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.
நீரிழிவு நோய்: நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நீரிழிவு நோய் ஏற்பட்டவர்கள் சாப்பிட வேண்டும். கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது.
சரும பிரச்னைகள்: சரும சம்பந்தமான பிரச்னைகளைப் போக்க கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகள் அதிகம் ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் தழும்புகள், அதீத சூரிய ஒளியால் சருமம் கருத்துப்போதல் உள்ளிட்ட பல பிரச்னைகள் கருப்பு உளுந்து அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் தீர்க்கிறது.
காயங்கள் புண்கள்: எதிர்பாராதவிதமாக அடிபடுதல் விபத்து போன்றவற்றில் உடலில் காயங்கள், புண்கள் போன்றவை ஏற்படுகின்றன. சமயங்களில் உள்காயங்களும் உண்டாகி விடுகின்றன. இத்தகைய பிரச்னையால் அவதிப்படுபவர்கள் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் அடிபட்ட இடத்தில் பிராண வாயு அதிகம் கிரகிக்கச் செய்து புண்களையும் காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.
இதயம்: நமது இதயம் நன்றாக இருக்க நமது உணவில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுவதால் நமது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
நரம்பு பிரச்னைகள்: இன்று பெரும்பாலானவருக்கு மன அழுத்தம் மிகுந்த ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. இதனால் மூளை மற்றும் உடலில் இருக்கும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்தை ஆசுவாசப்படுத்தி நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தங்கள் போன்றவற்றை நீக்குகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக குழந்தைகள் அடிக்கடி ஏதாவது ஒரு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துக்கள் நிறைந்துள்ள ஒரு உணவாக இருக்கிறது. எனவே, இந்த உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவை குழந்தைகள் அடிக்கடி சாப்பிடச் செய்வதன் மூலமாக எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும் பலவீனமாகவும் காணப்படும். இவர்களை தேற்றி தேகத்தை பலப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இச்சமயத்தில் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாகக் கொண்டு வந்தால் தேகம் வலுப்பெறும்.
மன அழுத்தம், ஓய்வில்லாத உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது. உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்துக் களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உளுந்தை காய வைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்துவந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.