வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலா பொருட்கள்... மீறி சாப்பிட்டா?
வெயில் காலம் தொடங்கிவிட்டாலே பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும். குறிப்பாக வெயிலின் தாக்கத்தால் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும். எனவே கோடைகாலத்தில் நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், கோடை மாதங்களில் இவற்றால் உடல் உஷ்ணம் அதிகரித்து செரிமானக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நாம் எதுபோன்ற மசாலா பொருட்களை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். இந்தப் பதிவில் வெயில் காலத்தில் நாம் எத்தகைய மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சிவப்பு மிளகாய்: சிவப்பு மிளகாயில் வெப்பத்தைத் தூண்டும் பண்புகள் உள்ளன. எனவே இவற்றை அதிக அளவில் உட்கொள்வதால் உடல் வெப்பநிலை அதிகரித்து செரிமான பாதிப்புகளை ஏற்படுத்தும். தேவையற்ற அசௌகரித்தைத் தடுக்க கோடைகாலத்தில் சிவப்பு மிளகாயை குறைத்துக் கொள்வது அல்லது முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.
மிளகு: மிளகு நம் உணவுக்கு தனித்துவமான சுவையை சேர்க்கும் அதே வேளையில், உடல் சூட்டை அதிகரிக்கும் ஒரு மசாலா பொருளாகும். வெயில் காலத்தில் அதிகமாக மிளகு உட்கொள்வதால், உடல் உஷ்ணமடைந்து அதிக வியர்வை வெளியேறும். எனவே இவற்றை அதிகமாக பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
லவங்கப்பட்டை: நறுமண மசாலா பொருளான லவங்கப் பட்டையும் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் ஒரு மசாலா பொருளாகும். கோடை காலத்தில் இதை உணவில் சேர்ப்பதால் உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்.
இஞ்சி: இஞ்சி உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அளித்தாலும், அதிகமாக இதை உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கோடைகாலத்தில் அதிகமாக இஞ்சி சாப்பிட்டால், உடல் திரவம் வியர்வை வழியாக வெளியேறி அசௌகரித்தை ஏற்படுத்தும். எனவே கோடைகாலத்தில் இஞ்சியை கவனமாக பயன்படுத்தவும்.
இதேபோல ஜாதிக்காய், ஏலக்காய், பூண்டு போன்ற பொருட்களையும் உங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களுமே உடல் வெப்பத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையதால், கோடைகாலத்தில் இவற்றை மிதமாகப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் உடல் வெப்பம் அதிகரித்தால் பல பாதிப்புகளுக்கு அது வழிவகுக்கும். எனவே முடிந்தவரை கோடைகாலத்தில் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.