உணவுகளில் மணத்திற்காக சேர்க்கப்படும் அன்னாசி பூ சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் ஒரு மசாலா பொருளாகும். பார்ப்பதற்கு நட்சத்திர வடிவில் இருக்கும் அன்னாசிப் பூ நம் அனைவரது சமையலறைகளிலும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் இதை பெரும்பாலும் பிரியாணி போன்ற உணவுகள் செய்யும்போது மட்டுமே நாம் பயன்படுத்தி இருப்போம்.
ஆனால் இதை நாம் அன்றாட உணவுகளில் சேர்த்து பயன்படுத்தும் போது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவற்றைப் பற்றி நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அன்னாசிப் பூ பார்ப்பதற்கு நட்சத்திர வடிவில் இருக்கும் இனிப்பு சுவை கொண்ட மசாலா. இதை அதிகமாக பிரியாணியில் தான் பயன்படுத்துவார்கள். இது பல ஆண்டுகளாக சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அன்னாசிப் பூ அழற்சியை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இது நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதில் க்வெர்சடின் மற்றும் லினலூல் போன்ற ஆக்சனேற்றங்கள் நிரம்பியுள்ளது. இவை செல்களை பாதுகாத்து ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. குறிப்பாக நமது உடலில் ஹார்மோன் சமநிலையைகா கொண்டு வந்து, ஹார்மோனை நிர்வகிக்க அதிக அளவு உதவுகிறது.
அன்னாசி பூவை உணவின் சுவையைக் கூட்ட பல உணவுகளில் பயன்படுத்தலாம். இது ஒயின் மற்றும் டீ போன்ற பானங்களுக்கு வித்தியாசமான வாசனையை கொடுத்து சுவையூட்டுகிறது. இது பெரும்பாலும் சூப்புகள், பிரியாணிகள் மற்றும் குழம்புகளில் சேர்க்கப்படுகிறது. பிரபலமான ஐந்து சீன மசாலா பொருட்களில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. சில நேரங்களில் இதை ஊறுகாயிலும் பயன்படுத்துகின்றனர்.
என்னதான் இது உடலுக்கு பல நன்மைகளை செய்தாலும் அன்னாசி பூவை அதிகமாக உட்கொள்வதால் சில ஆபத்துகளும் உள்ளது. இதை நாம் மிதமாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஒவ்வாமையை ஏற்படுத்தி மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் என்பதால் குறைந்த அளவிலேயே உணவில் சேர்த்து பயன்படுத்துங்கள்.
குறிப்பாக இதை தொடர்ந்து நீங்கள் உணவில் சேர்க்க விரும்பினால், தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.