

கோடை வெயிலால் உடலில் பலவித பாதிப்புகள் உருவாகும். அந்த பாதிப்புக வராமல் தடுக்க உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். அந்த நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்வதில் பலவிதங்களில் வேப்பம்பூ (neem flower benefits) உதவுகிறது.
சித்திரையில் பூத்து குலுங்கும் வேப்பம்பூ பலவித மருத்துவ குணநலன்களை கொண்டுள்ளது. கிருமி நாசினியான வேப்பம்பூ பித்தம் அதிகமானால் உண்டாகும் பெருமூச்சு, நாவறட்சி, சுவையின்மை, வாந்தி, நாட்பட்ட வாத நோய்கள், ஏப்பம், வயிற்று புழு இவற்றை நீக்கும் சக்தி கொண்டது.
புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய ஆற்றல் வேப்பம் பூவிற்கு உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. தலையில் உண்டாகும் பொடுகு பிரச்னைகளுக்கு 50மிலி தேங்காய் எண்ணெயில் ஒரு கைப்பிடி அளவு வேப்பம்பூவை போட்டு காய்ச்சி பூவுடன் தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு மற்றும் கேச நோய்கள் யாவும் குணமாகும்.
வெயில் காலத்தில் ஏற்படும் சரும நோய்களுக்கும், வயிறு உபாதைகளுக்கும் வேப்பம்பூ சிறந்த மருந்து. வேப்பம்பூவை உலர்த்தி பொடித்து 1/2 டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட வாய்க்கசப்பு மற்றும் வாந்தி தலைச்சுற்றல் சரியாகும்.
வேப்பம்பூவை காயவிட்டு 1 டீஸ்பூன் காய்ந்ததை எடுத்து சூடான நீரில் போட்டு கலந்து குளித்து வர வாதத்தால் உண்டாகும் உடல்வலி, நீங்கும், கபம் குறையும்.
வேப்பம்பூ பொடியுடன் வெல்லம் கலந்து பிள்ளைகளுக்கு கொடுக்க நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வயிற்றில் வாயு அதிகரிப்பதால் உண்டாகும் வயிற்று வலிக்கு இரண்டு தேக்கரண்டி வேப்பம்பூவை நெய்யில் வறுத்து பொடி செய்து சூடான அரிசி கஞ்சியில் கலந்து சாப்பிட நல்ல குணம் கிடைக்கும்.
கோடையின் வெப்பம் காரணமாக உடலில் ஏற்படும் வேனல் கட்டி, வியர்க்குரு, அரிப்பு போன்ற சரும நோய்களை வேப்பம்பூ போட்டு ஊற வைத்த நீரில் குளிக்க அவை சரியாகிவிடும்.
வயிற்று பூச்சி இருந்து சாப்பிடாமல் இருக்கும் சிறுவர்களுக்கு பூவை பொடி செய்து தேனுடன் கலந்து கொடுக்க பூச்சிகள் அழிந்து பிள்ளைகளுக்கு நன்கு பசியெடுக்கும்.
வேப்பம்பூ, இலை இவற்றை காய வைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு அதனால் புகை போட கிருமி தொற்று நீங்குவதுடன் கொசு, ஈ தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
இவ்வாறு பல்வேறு பலன்களை தரும் வேப்பம்பூவை தனியாக சாப்பிடலாம் அல்லது ரசம், பச்சடி என நம் சமையலில் சேர்த்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)