

நகர்புறத்து தொழிற்சாலை கழிவுகள், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, புகைப்பிடித்தல் மூலம் வரும் புகை, தூசு உருவாகுதல், தொழிற்சாலை புகை போன்றவைகளால் உருவாவது தான் நகர்புற ஆஸ்துமா (Urban Asthma). சில சமயங்களில் கரப்பான் பூச்சி, பல்லி போன்றவைகளாலும் ஆஸ்துமா ஏற்படும். இந்தியாவில் பல கோடி பேர் இந்த நகர்ப்புறத்தில் ஏற்படும் அர்பன் ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் இருமல், சுவாசத் தடை, நெஞ்சில் ஏற்படும் நெருக்கடி, குளிர்ந்து காற்று வீசும் நேரத்தில் ஏற்படும் சுவாச சிக்கல், எடை குறைவு போன்றவை இதன் அறிகுறிகள். இந்த மாதிரியான ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும்?
தூசி அதிகமாக படியும் இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். முடிந்த மட்டும் அந்த மாதிரி இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
கடுமையான மணமுள்ள பூக்கள் உள்ள அறையிலோ, வெளியிலோ அதன் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். சில பூச்செடிகள் ஆஸ்துமா தொந்தரவுகளை அதிகப்படுத்தும். அதிக அளவில் வெயில் உடலில் படக்கூடாது. புகைப் பிடிப்பதையும், மது அருந்துவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிரிஜ்ஜில் வைத்திருக்கும் எந்தப் பொருளையும் உண்ண வேண்டாம்.
வெள்ளை சர்க்கரை (ஜீனி), மைதா, டால்டா, அலர்ஜி ஏற்படுத்தும் சில வகை மீன்கள், முட்டை, வறுத்த உணவுகள், ஊறுகாய், குளிர் பானம் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவைகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. முடியாதபட்சத்தில் மிகவும் குறைந்த அளவே சாப்பிடுங்கள். இரவில் கெட்டியான உணவுகளை சாப்பிட வேண்டாம். அதற்கு பதிலாக சைவ சூப்களை சூடாகப் பருகுங்கள்.
காலையில் தினமும் 10 துளசி இலைகளை சாப்பிடுங்கள். ஆஸ்துமா தீவிரத்தை குறைக்கும் கேரட், தக்காளி, வெள்ளரி, பப்பாளி, பீட்ருட், கோவைக்காய், ஆப்பிள், மாதுளை, கீரைகள், தேங்காய், நெல்லிக்காய், போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவியல், சாதம் போன்றவைகளை சூடாக சாப்பிடுங்கள்.
பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பிரச்னைக்கு ஒரு எளிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். மருந்துகளுடன் வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது ஆஸ்துமா தாக்குதல்களின் அபாயத்தை தோராயமாக 50 சதவீதம் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சப்ளிமெண்ட்களுக்குப் பதிலாக, நீங்கள் தினமும் காலையிலும், மாலையிலும் இளம் வெயிலில் சிறிது நேரம் செலவிடலாம்.
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் குளிர்ந்த ஆறிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வசிக்கும் இடத்தில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற ஜந்துக்களின் நடமாட்டம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வளர்ப்பு பிராணிகளிடம் நெருக்கம் காட்டாமல் இருக்க வேண்டும். கம்பளி ஆடைகள் சிலருக்கு ஆஸ்துமாவை அதிகரிக்கும். எனவே, அவற்றை தவிர்க்க வேண்டும்.
மன நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை தவிர்க்க தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஜலதோஷம் வராத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். ஜலதோஷம் இருப்பவர்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாதிரியான ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்களுக்கு திடீரென சுவாச நெருக்கடி ஏற்படும் அதிலிருந்து நிவாரணம் பெற தலையை மட்டும் மூடியபடி இருக்க வேண்டும். தாங்கிக் கொள்ளும் அளவுக்கு சூடான நீரில் இரண்டு கால்களையும் முக்கி சிறிது நேரம் வைக்க வேண்டும். உடலின் வெளிப்பகுதிக்கு சூடு தேவை. துளசி இலை போட்டு சூடு நீரில் ஆவி பிடித்து கொள்ளலாம். இப்படி செய்வதால் அரை மணி நேரத்தில் ஆசுவாசம் கிடைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)