CIBIL Score 
பொருளாதாரம்

நேரம் தவறாமல் EMI செலுத்தியும் சிபில் ஸ்கோர் குறையுதா? இதான் காரணம்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

மாதாமாதம் வங்கிக் கடனுக்கான தவணைத் தொகையை செலுத்திய பிறகும் உங்களின் சிபில் ஸ்கோர் குறைகிறது எனக் கவலை கொள்பவரா நீங்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.

பொருளாதாரத் தேவைகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் வங்கிக் கடன்கள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வீடு கட்டுவதென்றாலும் கடன், வாகனம் வாங்கினாலும் கடன், நிலம் வாங்கினாலும் கடன் என்று பலரது வாழ்க்கை கடனிலேயே செல்கிறது. வாங்கிய கடனை அடைக்க மாதந்தோறும் இஎம்ஐ செலுத்தி வரும் மாதச் சம்பளக்காரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக உள்ளது. வங்கிகள் கடன் வழங்க வேண்டுமென்றால் ஒருவருடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும். இல்லையெனில், உடனே கடன் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த சிபில் ஸ்கோரை வைத்து தான் ஒருவருடைய முந்தைய கடன் வரலாறுகளை வங்கிகள் தெரிந்து கொள்ளும்.

சிபில் ஸ்கோர் 750-க்கும் மேல் இருந்தால் நல்ல ஸ்கோர் எனவும், 750-க்கும் கீழ் இருந்தால் கடன் வரலாற்றில் சிக்கல்கள் உள்ளது எனவும் வங்கிகள் புரிந்து கொள்ளும். இருப்பினும் ஒருவர் மாதாமாதம் இஎம்ஐ தொகையை சரியான நேரத்தில் செலுத்தி வந்தாலும், அவருக்கு சிபில் ஸ்கோர் ஏன் குறைகிறது என்றால், குழப்பமாக இருப்பது நியாயம் தான். சிபில் ஸ்கோர் குறைய மறைமுகமாக இருக்கும் சில காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

உடனடி புதிய கடன்கள்:

ஒருவர் ஒரு வங்கியில் கடன் வாங்கிய சிறிது காலத்திலேயே, அதே வங்கியில் அல்லது மற்றொரு வங்கியில் கடன் வாங்குவது அவருடைய சிபில் ஸ்கோரை பாதிக்கும். நீங்கள் மாதாந்திர இஎம்ஐ தொகையை சரியாக செலுத்தினால் கூட குறுகிய இடைவெளியில் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

உயர் பயன்பாட்டு விகிதம்:

கிரெடிட் கார்டு வைத்திருக்கும் ஒருவர், கார்டின் அதிகபட்ச லிமிட் வரை பணத்தை செலவு செய்வது நல்லதல்ல. உதாரணத்திற்கு ஒருவரது கிரெடிட் கார்டில் ரூ.1 லட்சம் வரை லிமிட் உள்ளது என்றால், ரூ.50,000 வரை செலவு செய்து கடனைக் கட்டுவது நல்லது. அதே சமயம் முழுத் தொகையையும் செலவு செய்வது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கும்.

ஜாயின்ட் கடன்:

இருவராக சேர்ந்து ஜாயின்ட் கடன் பெற்றிருந்தால், அதில் ஒருவர் கடனை செலுத்தத் தவறினாலும் சிபில் ஸ்கோர் பாதிக்கும். பொதுவாக இருவராக சேர்ந்து கடன் வாங்குவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

மோசடி:

உங்களுடைய அடையாளங்களைத் திருடி வேறொருவர் உங்கள் பெயரில் கடன் வாங்கி இருந்தால், அதில் பாதிக்கப்படப் போவது நீங்கள் தான். ஆகையால், உங்கள் ஆதாரங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி அல்லாது வேறு நபர்கள் உங்களைத் தொடர்பு கொண்டி ஓடிபி மற்றும் ஆதார் அடையாளங்களை கேட்கும் சமயத்தில் நீங்கள் கவனமுடன் செயல்படுவது மிகவும் முக்கியமானது.

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

ஃபேஸ்பேக்கை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பீர்களா? போச்சு!

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 4 வகையான விஷப்பாம்புகள்!

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

SCROLL FOR NEXT