pongal vada... Image credit - youtube.com
உணவு / சமையல்

பசிக்கு ருசியான ஹோட்டல் டேஸ்ட் வெண் பொங்கல் & சாம்பார் வடை!

சேலம் சுபா

காலை நேரம் உணவகம் செல்லும்போது வெண் பொங்கலும் சாம்பார் வடையும்தான் சாய்ஸாக இருக்கும். ஹோட்டல்களில் மட்டும்தான் டேஸ்ட் வருமா? ஏன் நாம் வீடுகளில் செய்தால் இந்த டேஸ்ட் வராதா என்று கேட்பவர்களுக்காக வெண்பொங்கல், சாம்பார் வடை ரெசிபி இங்கு.

வெண்பொங்கல்

தேவை:
பாசிப்பருப்பு - 1/4 கப்
பச்சரிசி - 1 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு- 10
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு- 2 டீஸ்பூன்
இஞ்சி- சிறு துண்டு
கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு- தாளிக்க
உப்பு -தேவையான அளவு 
கருவேப்பிலை -சிறிது

செய்முறை:
பாசிப்பருப்பை சுத்தம் செய்து சற்று சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் கழுவி ஊறவைத்த பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு குழைய வேக வைத்து இறக்கவும் .ஒரு கடாயில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் கல்லப்பருப்பு , உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் ஒன்றிரண்டாக பொடித்த சீரகம், மிளகு மற்றும் ஒடித்த முந்திரிப்பருப்பு , கறிவேப்பிலையை போட்டு சிவந்தவுடன் அதை சாதத்துடன் கலந்து கிளறி விட்டு இரண்டு நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்.
குறிப்பு - நெய் மணமாக இருந்தால் வெண் பொங்கல் மணமும் தூக்கும். தாளிக்கும் போது கருகாமல்  எடுப்பது முக்கியம். மிளகு இருப்பதால் காரம் இருக்கும். தேவை என்றால் தாளிக்கும் போது ஒரு பச்சைமிளகாய் நறுக்கி சேர்க்கலாம்.

சாம்பார் மெதுவடை
தேவை:

வடைக்கு
உளுத்தம் பருப்பு அரை கப்
இஞ்சி சிறு துண்டு
இரண்டு பச்சை மிளகாய்
பொடித்த மிளகு
தேவையான எண்ணெய்
உப்பு சிறிது

உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் மட்டும் ஊற வைத்து நன்கு வடித்து வைத்துக் கொள்ளவும் பச்சை மிளகாய் இஞ்சி உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து மீதமுள்ள உளுத்தம் பருப்பையும் கெட்டியாக நைசாக அரைத்து எடுக்கவும். அதில் பொடித்த மிளகு போட்டுக் கலந்து அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் நடுவில் ஓட்டை உள்ள வடைகளாக தட்டி போட்டு எடுக்கவும்.

பருப்பு சாம்பார் செய்முறை:

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்
தேங்காய் துருவல் -ஒரு ஸ்பூன்
(தனியா) கொத்தமல்லி விதை - கால் ஸ்பூன்
சீரகம் மிளகு - தலா ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் -2
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
சாம்பார் தூள்- அரை டீஸ்பூன்
பெருங்காயம்- சிறிது
கருவேப்பிலை கொத்தமல்லி - நறுக்கியது
சின்ன வெங்காயம் -10 நறுக்கியது

செய்முறை:
முதலில் பருப்பை மஞ்சள் தூள் விளக்கெண்ணெய் விட்டு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும் . அடுத்து சிறிது எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், தனியா மிளகாய், தேங்காய்த் துருவல்  போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் விட்டு பொடியாக அரைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் இரண்டாக பிளந்த சின்ன வெங்காயம், பெருங்காயம் போட்டு தாளித்து அதனுடன் சாம்பார் தூள் ,அரைத்த கலவை ஆகியவற்றை சேர்த்து பருப்புடன் கலந்து  தேவையான உப்பு , புளித்தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கொதித்தமும் கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்.  சூடான வடைகளை அதில் போட்டு சிறிது நேரம் விட்டால் நன்றாக வடைகள் ஊறி இருக்கும்.

சிறுகதை: களிமண் பிள்யைாரும் மூணு யூனிட் இரத்தமும்!

சருமத்தில் இந்த அறிகுறிகளா? ஜாக்கிரதை! 

சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!

மதங்க முனிவர் காட்சி கொடுத்த திருநாங்கூர் மாதங்கீஸ்வரர்!

சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!

SCROLL FOR NEXT