healthy snacks... Image credit - youtube.com
உணவு / சமையல்

ரவை அப்பமும், வெஜ் அவலும்!

இந்திராணி தங்கவேல்

வையப்பம் செய்யப் போகிறேன் என்று கூறினால் கேசரியை மைதாவுக்குள் திணிக்கப் போகிறாய் அவ்வளவுதானே. கேசரியாகவே  கொடுத்தால் சாப்பிட்டுவிட்டுப் போகிறோம். அதற்கு எதற்கு இப்படி ஒரு பெயர் என்று கிண்டலாக கூறுவார்கள். ஆனால் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். அதன் செய்முறையைப் பற்றி இதோ:

செய்யத் தேவையான பொருட்கள்:

மாவு பிசைய

மைதா ஒரு- கப்

உப்பு- ஒரு சிட்டிகை 

நெய்- ஒரு டீஸ்பூன்

பூரணத்திற்கு

பொடி ரவை- அரைகப் 

துருவிய வெல்லம்- முக்கால் கப்

ஒடித்து நசுக்கிய முந்திரிப்பருப்பு- ஒரு டேபிள் ஸ்பூன் 

தேங்காய்த் துருவல்- அரை கப்

ஏலப்பொடி -கால் டீஸ்பூன்

பச்சைக் கற்பூரம்- சிறிதளவு

எண்ணெய்- பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

சலித்த மைதாமாவுடன்  உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும். 

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி ஒன்னரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ரவையைக் கொட்டி கிளறவும். ரவை வெந்ததும் வெல்லத்துருவல் மற்றும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்றாக கெட்டி பதத்திற்கு வந்ததும், முந்திரிப் பருப்பு, பச்சைக் கற்பூரம், ஏலப்பொடி எல்லாவற்றையும் போட்டு சிறிதளவு நெய்விட்டு கிளறவும். பிறகு  இந்தப் பூரணத்தை ஆறவைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். 

ஊறிய மைதாவை எடுத்து சிறிய  அப்பங்களாக பூரி வடிவத்திற்குத் திரட்டி, அதில் இந்த ரவா பூரணத்தை வைத்து மூலையை ஒன்றாகச் சேர்த்து நன்றாக மூடி  பூரணம் வெளியில் வந்து விடாதபடிக்கு தேய்க்கவும். பிறகு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் திரட்டி வைத்திருக்கும் வட்ட அப்பங்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். ரவை அப்பம் ரெடி. வரிசை கட்டி வரும் பண்டிகை தினங்களில் செய்து கொடுத்து அசத்தலாம்.

வெஜ் அவல்:

செய்யத் தேவையான பொருட்கள்:

திக்கான அவல் - ஒரு கப்

கேரட், பீன்ஸ், கேப்சிகம் போன்றவற்றை பொடியாக அரிந்தது- ஒரு கப்

பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் -ஒன்று

பொடியாக அரிந்த பச்சை மிளகாய்- இரண்டு

வேர்க்கடலை -ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு- தாளிக்க

உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

எலுமிச்சை- அரை மூடி

கறிவேப்பிலை ,மல்லித்தழை சிறிதளவு

செய்முறை:

கெட்டி அவலை கழுவி நன்கு ஊற விடவும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை, அரிந்த காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். காய்கறி நன்கு வதங்கியதும் மஞ்சள் பொடி, உப்பு ,நறுக்கிய தனியா, ஊறவைத்த அவல் அனைத்தையும் நன்றாக ஒன்றாக சேர்த்து வதக்கி லெமன் பிழிந்து இறக்கி விருப்பப்பட்ட சட்னியுடன் பரிமாறவும்.

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

காலை 11 மணிக்கு முன்னதாக இந்த 7 விஷயங்களை செய்துவிட்டாலே வெற்றிதான்! 

சனி தோஷம் நீக்கும் புரட்டாசி சனி விரதம்!

SCROLL FOR NEXT