கல்கி

கூகுளாண்டவருக்கு  ரூ.2,274 கோடி அபராதம்!

ரமணன்

ரு கேள்விக்கான விடை காணவோ, ஏதாவது ஒரு பெயரை டைப் செய்து, எதையாவது தேடவேண்டுமென்றாலோ, யாருடைய ஜாதகத்தையாவது தேட வேண்டுமென்றாலோ, வரலாறு குறித்து அறிய வேண்டுமென்றாலோ அனைத்துத் தேவைகளுக்கும் நம்பகமான ஒரே வழியாக இருப்பது கூகுள் தான்.

ஆனால், கூகுள் என்பது வெறும் சர்ச் எஞ்சினாகவோ, இன்டர்நெட் ப்ரௌசராகவோ, மின்னஞ்சல் சேவையாகவோ மட்டும் இல்லை.

கூகுள் தற்போது இவை அத்தனையும் ஒருங்கே அமைந்த ஒற்றை ஆயுதமாகத்தான் விளங்குகிறது. இது நம் வாழ்க்கையை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்துள்ளது. மேலும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கூட இப்போது கூகுளுடனான போட்டியில் சிக்கலில் சிக்கியுள்ளன. அதனால்தான் கூகுளை “கூகுளாண்டவர்” என்று கடவுள் ரேஞ்சுக்கு உயர்வாகப் பேசுகிறார்கள்

 இந்தியாவில் ஆரோக்கியமான வணிகப் போட்டியை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பான இந்திய வணிகப் போட்டி ஆணையம் Competition Commission of India (CCI) கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது.

 ஒருமுறை அல்ல, ஒரே வாரத்தில் இரண்டு முறை என மொத்தமாக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.2274 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 20ஆம் தேதி கூகுளுக்கு சிசிஐ ரூ.1337.76 கோடி அபராதம் விதித்தது. ஆண்ட்ராய்டு மொபைல் சாதன வணிகத்தில் அதன் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 பின்னர் அக்டோபர் 25 அன்று, அதே கமிஷன் ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது. இந்த முறை கூகுள் பிளே ஸ்டோரில் பணம் எடுப்பது தொடர்பான கூகுளின் கொள்கை காரணமாக அபராதம் விதிக்கப்பட்டது.

சிசிஐ இந்த இரண்டு வழக்குகளையும் 2019 மற்றும் 2020 முதல் தனித்தனியாக விசாரித்து வந்தது.

 கூகுளுக்கு இது சுண்டைக்காய்ப் பணம்

இந்த அபராதம் ரூ.2274 கோடி அல்லது சுமார் 280 மில்லியன் டாலர்கள் என்பது கடந்த ஆண்டு கூகுளின் ஆண்டு வருமானமான 257 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.21 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது, கடுகளவு கூட இல்லை.

 ஆனாலும்  கூகுள் இதைத் தவிர்க்க போராடுகிறது.  காரணம்  இந்த அபராதம் கூட கூகுள் நிறுவனத்துக்கு  உலகளவில் ஒரு சிக்கலை உருவாக்கக்கூடும்.

 சிசிஐயின் அபராத உத்தரவை அப்படியே ஏற்றுக்கொண்டால், சந்தையில் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொண்டதாகப் பொருளாகிவிடும்.

அவ்வாறு செய்வது அந்நிறுவனத்துக்கு மிகவும் ஆபத்தாக முடியும், ஏனென்றால் எந்த ஒரு நாட்டிலும் இதை ஏற்றுக்கொள்வது, உலகின் பிற பகுதிகளில் நடக்கும் இதுபோன்ற வழக்குகளில் அதன் நிலையை பலவீனப்படுத்தும்.

எனவே, அனைத்துச் சட்ட வழிகளையும் முயற்சித்து, அனைத்து மட்டங்களிலும் நீதிமன்றப் போராட்டத்தில் இறுதிவரை கூகுள்  போராடும்.

 என்ன சிக்கல்?  

கூகுளின்  கைகளில் உள்ள இந்த  மாபெரும் தொழில்நுட்பம் கட்டுப்பாடற்றதாக மாறும் அபாயத்தை, இப்போது ஏறக்குறைய உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் இதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன.

அதனால்தான், அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு, அவை தலைப்புச் செய்திகளாகவும் மாறுகின்றன.

இதுபோன்ற முடிவுகள் இந்தியாவில் முதன்முறையாக வந்திருக்கலாம், ஆனால், “எந்த நிறுவனம் அல்லது பிராண்டின் சாதனங்களை வாங்கினாலும், அதை இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் கூகுள் நிறுவனத்தினுடையதுதான்” என்பதை ஆண்ட்ராய்டு ஃபோன்கள் அல்லது ஆண்ட்ராய்டில் இயங்கும் எந்த சாதனத்தையும் பயன்படுத்துபவர்கள் நன்றாக அறிவார்கள்.

 தன் ஆபரேட்டிங் சிஸ்டமுடன் கூகுள், தன்னுடைய பல செயலிகளையும் தொலைபேசியில் நிறுவுகிறது.

OS எப்போதும் கூகுள் நிறுவனத்துடையதுதான். கூகுளின் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம், கூகுளின் ஆப் ஸ்டோர், அதாவது ப்ளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஜிமெயில் போன்ற இணைய சேவைகள், அதன் ப்ரௌசரான குரோம் மற்றும் அதே வெப் வீடியோ பதிவிடும் யூட்யூப் ஆகியவற்றை மொபைல் ஃபோனில் நிறுவ, மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன.

 மற்ற நிறுவனங்கள் மூலம்  செயலிகள் செயல்பட  கூகுள் தடை விதித்திருப்பதை சிசிஐ தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.

 இது மட்டுமல்லாமல், தொலைபேசி வாங்குபவர் தனது இருப்பிடம் மற்றும் பிற முக்கிய தகவல்களை இந்தச் சேவைகளுக்கு வழங்காமல் தொலைபேசியை இயக்க முடியாது. மேலும் இந்த ஆப்ஸ் மற்றும் சேவைகளை நீக்கும் வாய்ப்பும் பயனருக்கு இல்லை.

 இந்தியாவில் சுமார் 60 மில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் 95 சதவீதம் பேர் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துகின்றனர்.

 இந்திய சந்தையின் மீதான தனது செல்வாக்கை கூகுள் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதை சிசிஐ விட்ஜிகளுக்கு மாறானது . மேலும் இதுபோன்ற செயல்பாடுகள், பயன்பாடுகள் மற்றும் சேவைகளை உருவாக்கி இயக்கும் பிற நிறுவனங்களின் வணிகத்தை இது கட்டுப்படுத்துகிறது. 

சிசிஐ, கூகுளுக்கு அபராதம் விதித்தது மட்டுமல்லாமல், பிற செயலிகளை உருவாக்குபவர்களுக்கும் தடைகள் உடனடியாக அகற்றப்படுவதை உறுதிசெய்யவும், மேலும் ஃபோன் வாங்குபவர்கள் கூகுளின் ஆப்ஸ் அல்லது மற்றொரு  சேவைகளைப் பயன்படுத்துவதைத் தேர்வு செய்யவும் வழி வகை செய்யப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 இரண்டாவது வழக்கு, ஆண்ட்ராய்ட் மூலம் செயல்படும் ஒரு பயன்பாட்டை உருவாக்கிய நிறுவனங்கள் அதை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது குறித்தது. இதிலும் கூகுள் ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

வாடிக்கையாளர்களிடம் இருந்து  அதற்கு பணம் வசூலிக்க கூகுள் ப்ளே பில்லிங் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது. இது கூகுளின் சொந்த கட்டணச் சேவையாகும், நிச்சயமாக இதைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் அல்லது கமிஷன் செலுத்த வேண்டும். இதன் மூலம் கூகுள் தொடர்ந்து பணம் ஈட்டிக்கொண்டிருக்கிறது.

தனது சந்தை பலத்தை கூகுள் தவறாகப் பயன்படுத்திக்கொண்டதாகக் குற்றம் சாட்டிய சிசிஐ, அபராதத்துடன் மூன்றாம் தரப்பு கட்டண சேவைகளையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது. 

கூகுளின் வாதம்

குறைந்த விலையில், இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு பங்களித்துள்ளதாகவும், அதன் பலன்களை கோடிக்கணக்கான இந்திய நுகர்வோருக்கு வழங்கியதாகவும் கூகுள்  வாதிடுகிறது.  அபராதம் மிகஅதிகம் என்றும் வாதிடுகிறாது, இதை  ஏற்காமல்  தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்  கூகுளின்  மேல் முறையீட்டுக்கு  அனுமதி வழங்கியிருக்கிறது

  இந்தியா மட்டுமில்லை

 தென் கொரியாவும் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு மூன்றாம் தரப்பு பணம் செலுத்துவதற்கான வழி வகை செய்யுமாறு அறிவுறுத்தி, சுமார் $ 180 மில்லியன் அபராதம் விதித்தது.

இறுதியில் அந்நிறுவனம் அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தில், 2018ஆம் ஆண்டில், ஆன்டிட்ரஸ்ட் கமிஷன் கூகுளுக்கு 4340 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்தது.

இதற்கு எதிராக கூகுள் மேல்முறையீடு செய்தது, ஆனால் அங்கும் அதன் விண்ணப்பம் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது.

இந்தியாவில் கூகுளின் ராஜபாட்டையில் தடைகள் முளைத்துள்ளன. இன்று இல்லை என்றால் நாளை, அந்நிறுவனம், இந்தத் தீர்ப்பை எதிர்த்து நிச்சயம் மேல்முறையீடு செய்யும்.

இந்த விவகாரம் தொடர்ந்தால், கூகுளுக்கு மட்டுமல்ல, பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் சிக்கல்கள் அதிகரிக்கலாம். இந்த வழக்கின் காரணமாக கூகுள்  தங்கள் வணிக நடைமுறைகளை மேம்படுத்தினால், அது இந்தியா மட்டுமில்லாமல்  உலகின் பிற  நாடுகளின் நுகர்வோருக்கும் மகிச்சி தரும் செய்தியாக இருக்கும்  

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT