செய்திகள்

‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்தில் அரசுக்கே அதிகாரம்’ உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

கல்கி டெஸ்க்

ந்தியத் தலைநகர் டெல்லியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது ஆம் ஆத்மி கட்சி. முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். இங்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் என்பது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் பணி நியமனம் மற்றும் இடமாற்றம் என்பதை மத்திய அரசுதான் செய்து வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று ஐந்து நீதிபதிகள் கொண்டு அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ‘டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரை விட, மாநில அரசுக்கே உள்ளது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் உண்டு. அரசு அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பதை ஏற்க முடியாது. 2019ல் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு வழங்கிய தீர்ப்பில் உடன்பாடில்லை என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்து உள்ளது. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவே டெல்லி பேரவைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. யூனியன் பிரதேசமாக இருந்தாலும் டெல்லி அரசு கூட்டாட்சியின்படியே இயங்குகிறது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் அங்கம் ஆகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கையில்தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். அரசுக்கு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாதது தவறு. அரசுக்கு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும். அதிகாரிகள் கட்டுப்படவில்லை என்றால் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு என்ற கொள்கைக்கு ஆபத்து ஏற்படும்.

அரசுக்கு அதிகாரம் இல்லை என்றால் அமைச்சர்கள் கூறும் உத்தரவை அதிகாரிகள் கேட்காத நிலை ஏற்படும். டெல்லி அரசின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது. டெல்லியின் துணை நிலை ஆளுநரை விட, முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது’ என உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து, ‘துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம்’ என்ற மத்திய அரசின் வாதமும் நிராகரிக்கப்பட்டது. மேலும், ‘மாநிலங்களின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ள முடியாது. அதோடு, மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை மத்திய அரசு எடுத்து கொள்ளாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT