Birthday of natural scientist Nammazhvar
Birthday of natural scientist Nammazhvar https://kallarkulavaralaru.blogspot.com
ஸ்பெஷல்

இயற்கையோடு இதயம் திறந்து பேசிய வேளாண் விஞ்ஞானி!

சேலம் சுபா

சுமை மற்றும் இயற்கை பற்றிய விழிப்புணர்வையும் பாரம்பரிய உணவு பற்றிய புரிதலையும் உறவுகள் பற்றிய உன்னதத்தையும் தற்போது பெரும்பாலோர் புரிந்து அதன் வழி சென்று ஆரோக்கியமான சமூகம் அமையக் காரணமானவராக அறியப்படுபவர் இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வார்.

தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவரான நம்மாழ்வார் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள இளங்காடு எனும் சிற்றூரில் ஏப்ரல் 6, 1938ம் ஆண்டு பிறந்தவர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலை படிப்புப் பயின்றார். மண்ணின் மீது அதீத பாசம் கொண்ட இவர், பசுமை புரட்சி, சுற்றுச்சூழல் மாசடைதல் தொடர்பான காரசாரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்று வழிகளையும் முன்வைத்தவர். முக்கியமாக, தமிழ்நாட்டில் உரமற்ற, நஞ்சற்ற இயற்கை வழி விவசாயத்தை ஊக்குவித்தவர். பூச்சிக்கொல்லிகள், மீத்தேன் வாயு திட்டம், மரபணு சோதனைகள், வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி, விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு சமூக கேடுகளை எதிர்த்தவர். மேலும், இவர் சமூக சேவைகளிலும் சிறந்து விளங்கினார்.

எதிர்கால சந்ததிகள் வேளாண்மையை பற்றி அறிந்துகொள்ளும் விதமாக பல்வேறு விதமான வேளாண்மை பற்றிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சேவைகளுக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவருக்கு, ‘சுற்றுச்சூழல் சுடரொளி’ விருதினை வழங்கியது. திண்டுக்கல்லை சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இவரைப் பின்பற்றி பலரும் தங்கள் வாழ்க்கை முறையையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் வழியை பின்பற்றி ஏராளமானவர்கள் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து வருவது சிறப்பு.

இயற்கையோடு பேசும் வித்தையை இவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். ஆம், மரங்கள், செடி, கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர். அதற்குச் சான்றாக இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.

விழுப்புரத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில், விவசாயி ஒருவரின் தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் நம்மாழ்வார். அந்த விவசாயி, "ஐயா, இந்த பலா மரம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இருக்கு. ஆனால், இதுநாள் வரை ஒரு பழம் கூட தரவில்லை. இந்த மரத்தின் நிழலால், மற்ற பயிர்களும் வளர்வதில்லை. அதனால் இதை வெட்டி விடலாம் என்று இருக்கிறேன்" என்கிறார்.

“பறவையெல்லால் கூடு கட்டி இருக்கே?” என்று உடைந்த குரலில் கேட்கிறார் நம்மாழ்வார்.

“இல்லைங்கய்யா. நமக்கு இந்த மரத்தால எந்த பயனும் இல்லை” என்கிறார் விவசாயி.

இதைக் கேட்டவுடன், ஓடி சென்று நம்மாழ்வார் அந்த பலா மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு, ஓவென்று அழுகிறார். பின்பு மரத்திடம், “உன்னை பிரயோஜனம் இல்லாதவன்னு சொல்றானே. அவனுக்கு நீ ஏன் பழம் தர மாட்டேங்கிற?” என்று மரத்துடன் உணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல் நடத்துகிறார். இதைப் பார்த்த விவசாயியின் மனம் மாறுகிறது. மரத்தை வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.

ஆனால், இத்துடன் இது முடியவில்லை. ஓராண்டுக்கு பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய பலாப்பழத்துடன் திருச்சி மாவட்டம், திருவானைக்காவில் இருந்த நம்மாழ்வாரை சந்திக்க வருகிறார். “அய்யா, அந்த மரத்துல காய்ச்ச பழம்யா...” என்று உச்சகட்ட சந்தோஷத்தில் அழுதுகொண்டே பழத்தைக் கொடுக்கிறார்.

ஆம். இயற்கை நம்மோடு இணைந்து வாழவே விரும்புகிறது. இயற்கையோடு நாம் பேசலாம். மனிதர்களை விட மரங்கள் நம்மைப் புரிந்து கொள்ளும். இதையேதான் வாழும் வரை வலியுறுத்தினார் நம்மாழ்வார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்த தினமான இன்று நாமும் இயற்கையை பாதுகாக்க உறுதி ஏற்போம்.

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT