நம் வரவை விட செலவு அதிகமாக இருப்பின் அது நம்மை கடன் சூழ்நிலைக்குத் தள்ளிவிடும். ஒன்று நாம் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவராக இருப்போம் அல்லது அளவுக்கு அதிகமான கிரெடிட் கார்டு பேமென்ட் அல்லது கடன் வட்டி பேமென்ட்களின் சுமையைக் கொண்டிருப்போம். கடனிலிருந்து விடுபட்டு நிதி சுதந்திரம் பெறுவதற்கு சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்.
முதலில் நம் நிதி நிலைமையை மதிப்பிட வேண்டும். அத்துடன் நிலுவையில் உள்ள அனைத்துக் கடன்களையும் பட்டியலிட வேண்டும். அடுத்ததாக எப்படி திருப்பி செலுத்துவது என்ற திட்டத்தை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச திருப்பி செலுத்துதல் தொகையை விட அதிகமாக செலுத்துவது கடனை சீக்கிரம் அடைக்க உதவும்.
கடனிலிருந்து விடுபடுவதற்கு முதலில் நம்மிடம் உள்ள சிறிய மற்றும் பெரிய கடன்கள் அனைத்தையும் பட்டியலிட்டு, அதிக வட்டி உள்ள கடன்களை முதலில் செலுத்த வேண்டும். மேலும் மாதாந்திர பட்ஜெட் தயாரித்து தேவையற்ற செலவுகளைக் குறைத்து கிடைக்கும் கூடுதல் பணத்தை கடன் அடைக்கப் பயன்படுத்த வேண்டும். பகுதி நேர வேலை அல்லது சிறிய தொழில்கள் மூலம் வரும் கூடுதல் பணத்தை கடனை அடைக்கப் பயன்படுத்தலாம்.
1) கடன்களை ஒருமுகப்படுத்துதல்: இப்போதெல்லாம் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் என குறைந்த விகிதத்தில் நிறைய கடன்களை வழங்கி மக்களை ஈர்த்து வருகின்றன. மக்களும் வாங்கியக் கடனை அடைப்பதில் உள்ள சிரமங்களைப் பற்றி யோசிக்காமல் கடன்களைப் பெறுகின்றனர். தங்களுக்கான வருமானம் எவ்வளவு? நம்மால் திருப்பி செலுத்தக்கூடிய வசதி உள்ளதா என்பதைப் பற்றி யோசிக்காமல் பல கடன்களைப் பெறுவதும், ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பெறுவதும் என்றிருக்கின்றார்கள்.
இதற்கு ஒரு வழி கடன் ஒருங்கிணைப்பு தான். கடன் ஒருங்கிணைப்பு பல கடன்களை ஒரே கடனாக இணைப்பது, பெரும்பாலும் குறைந்த வட்டி விகிதத்தில். இது திருப்பிச் செலுத்தும் திறனை எளிதாக்குகிறது. அத்துடன் ஒட்டுமொத்த நிதிச் சுமையையும் குறைக்கிறது. இதனால் கடன் ஒருங்கிணைப்பு நம்மை கடனிலிருந்து விடுபட உதவுகிறது.
2) குறைந்தபட்ச பாக்கித் தொகையை விட அதிகமாக செலுத்துவது: கடன் அடைப்பு அல்லது கிரெடிட் கார்டு பேமெண்ட் செலுத்தும் பொழுது எப்படி கடனிலிருந்து விடுபடுவது என்று நினைக்கிறீர்களா? மாதம்தோறும் குறைந்தபட்ச பாக்கித் தொகையை விட அதிகமாகச் செலுத்துவது தான் இதற்கு சிறந்த வழி.
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அதிக நெருக்கடி இல்லாத வகையில் குறைந்தபட்ச வரம்பை விட சற்று அதிகமாக செலுத்த முடியும். இப்படி சற்று அதிகமாக செலுத்துவதால், பாக்கி அசல் தொகை குறையும். இதன் மூலம் அடுத்த சுழற்சியில் செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையும் குறையும்.
3) செலவுகளைக் கண்காணிப்பது: திடீரென்று நம்முடைய வருமானத்தைக் கூட்டுவது என்பது எளிதல்ல. எனினும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். செலவுகளைக் கண்காணித்து தேவையற்றதை குறைத்துக் கொள்ள வேண்டும். இது நம் வருமான கையிருப்பை அதிகரித்து கடனை விரைவாக அடைக்க உதவும். பட்ஜெட் திட்டமிடல் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் கடனை திருப்பி செலுத்தும் திறனையும் அதிகரிக்கும்.
4) குறைந்த கடன் விகிதங்களைப் பெறுவது: கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும். ஏனெனில் அவை நாட்டின் பொருளாதார நிலை, நிதி வரத்து, சந்தை நிலைமைகள் போன்ற பல்வேறு காரணங்களைப் பொறுத்து அமைகிறது. எனவே வட்டி விகிதம் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இது குறித்து கவனித்து வருவது நல்லது. ஏனென்றால் வட்டி விகிதம் குறையும் பொழுது குறைந்த விகிதக் கடனைப் பெற்று பழைய கடன்களை அடைத்து விடலாம்.
இது பணத்தை மிச்சப்படுத்தி கடன் தொல்லையிலிருந்து நம்மை வெளியேற்ற உதவும். எனவே வட்டி விகிதங்களைக் கண்காணிப்பது மலிவான விகிதங்களைக் கொண்ட கடன்களுக்கு மாற உதவும். இது பணத்தை மிச்சப்படுத்தி திருப்பி செலுத்தும் காலக்கெடுவையும் குறைக்கிறது.
5) உரிய நேரத்தில் செலுத்துவது: கார்டு பில்கள், கடன் ஆகியவற்றை உரிய நேரத்தில் அதன் பாக்கியத்தை செலுத்துவது நல்லது. ஏனென்றால் தாமதிப்பதால் அபராதம் விதிக்கப்பட்டு கடன் தொகை அதிகரிக்கும். அத்துடன் முக்கியமாக தவணை முறையில் பொருட்களை வாங்குவது, ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பெறுவது போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference