பற்றியெரியும் எண்ணெய் கிணறுகள்... அதிரும் பங்குச்சந்தை! 10 கிராம் தங்கம் விலை ரூ.1.4 லட்சமா?

Trump
Trump
Published on

2026-ம் ஆண்டின் தொடக்கமே உலக அரசியல் களத்தில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமைதியாகப் போய்க்கொண்டிருந்த சர்வதேச அரசியலில், அமெரிக்கா வீசிய ஒரு 'வெடிகுண்டு' செய்தி, உலக நாடுகளை மட்டுமல்லாது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் ஆட்டம் காண வைத்துள்ளது. 

வெனிசுலா தலைநகர் காரகஸில் அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலும், அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்துள்ள சம்பவமும் உலக அரங்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் சொர்க்கமாகத் திகழும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

போர் பயம்!

எப்போதெல்லாம் உலக நாடுகளில் போர் பதற்றம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பங்குச்சந்தை மற்றும் கரன்சி வர்த்தகம் ஆட்டம் காணும். அந்த நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாக்கத் தேர்ந்தெடுக்கும் ஒரே இடம் தங்கம். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. வெனிசுலா விவகாரத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, சர்வதேசச் சந்தையில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,550 டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் கற்பனை செய்து பார்க்க முடியாத உயரமாகும்.

இந்தியாவின் எம்.சி.எக்ஸ் (MCX) சந்தையிலும் இதன் எதிரொலி பலமாகவே இருக்கிறது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1,40,465 என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அதேபோல, வெள்ளியின் விலையும் சத்தமில்லாமல் எகிறிக்கொண்டிருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 83.75 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. தொழிற்சாலைத் தேவைகளுக்கு வெள்ளி அவசியம் என்பதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பசுவின்றி பால் உற்பத்தி...! பால் பண்ணை உலகின் எதிர்காலம் என்ன?
Trump

கச்சா எண்ணெய் சந்தை!

வெனிசுலா என்பது சாதாரண நாடு அல்ல; அது உலகின் மிக முக்கியமான எண்ணெய் வளங்களைக் கொண்ட தேசங்களில் ஒன்று. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் கரீபியன் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு, வெனிசுலாவின் எண்ணெய் கப்பல்களைக் கண்காணித்து வருவதால், அங்கிருந்து வெளியேற வேண்டிய எண்ணெய் ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 1 சதவீதத்தைப் பாதிக்கும்.

ஏற்கனவே 2025-ன் இறுதியில் 60 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய், தற்போது நிலவும் பதற்றத்தால் ஒரு பேரலுக்கு 65 டாலர் வரை உயரக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எண்ணெய் விலை உயர்ந்தால், அது மற்ற அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்விற்கும் வழிவகுக்கும் என்பது நாம் அறிந்ததே.

இதையும் படியுங்கள்:
இதுதான் எதிர்காலம்..! இனி 30 நிமிஷத்தில் 100 கி.மீ தூரம் பயணிக்கலாம்..!
Trump

எதிர்காலம்? 

இந்த அரசியல் களேபரங்கள் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை. எனவே, தங்கத்தின் மீதான முதலீட்டு மோகம் இன்னும் சில காலத்திற்குத் தொடரும் என்றே கணிக்கப்படுகிறது. இப்படியே சென்றால், 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் சர்வதேசச் சந்தையில் தங்கம் 5,000 டாலரைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஒருவேளை, வெனிசுலாவில் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான ஒரு புதிய அரசாங்கம் அமைந்தால் மட்டுமே, எண்ணெய் உற்பத்தி அதிகரித்து சந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. அதுவரை, தங்கம் மற்றும் வெள்ளி விலையின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் தான் இருக்கும். பொங்கலுக்கு நகை வாங்கத் திட்டமிடுபவர்கள், இந்தத் திடீர் விலை ஏற்றத்தைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com