

முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. பிறகு ஐடி துறையில் வேலை செய்வது பெரிதாக பேசப்பட்டது. ஆனால் இப்பொழுதோ பிசினஸ் செய்வதையே இன்றைய இளைஞர்கள் மிகவும் விரும்புகிறார்கள். எவ்வளவு நாள்தான் பிறரிடம் கைகட்டி சம்பளம் வாங்குவது, நாம் பிறருக்கு சம்பளம் கொடுக்கும் நிலைக்கு உயரவேண்டாமா என்ற எண்ணம் இப்போது அதிகம் தலை தூக்குகிறது.
*வியாபாரம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதற்குத் தேவையான முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் வியாபாரத்தில் வெற்றி பெற முடியும்.
*பிசினஸ் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் அதைப்பற்றி நன்கு சிந்திக்க வேண்டும். எந்த மாதிரியான பிசினஸ் செய்யலாம்? எதை செய்தால் நன்றாக ஓடும்? இது நம்மால் சாத்தியமா என்று தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
*ஒருமுறை முடிவெடுத்துவிட்டால் அதில் தீவிரமாக இறங்குவது பற்றி முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். முதல் வேலையாக அந்த பிசினஸ் ஐடியாவை பதிவு செய்ய வேண்டும். பிறகு இந்த ஐடியாவிற்கு முழு உருவம் கொடுத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
*நிதித் திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம். தொடக்க முதலீடு எவ்வளவு? மூலப்பொருட்கள், இடம், பணியாளர் சம்பளம் மற்றும் அவசரத் தேவைகளுக்கான நிதி (Working Capital) ஆகியவற்றை திட்டமிட வேண்டும்.
*நாம் தயாரிக்கும் பொருட்கள் அல்லது சேவைக்கு சந்தையில் தேவை (Demand) உள்ளதா? உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை ஆராய வேண்டும். அத்துடன் சேவை வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும். இதுவே வணிகத்தின் அடிப்படை. சட்டப்பூர்வ ஆவணங்களான ஜிஎஸ்டி பதிவு, பான் கார்டு, வங்கி கணக்கு மற்றும் உள்ளூர் உரிமங்களைப் பெறவேண்டும்.
*வியாபாரத்தை தொடங்கியாச்சு. இனி தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்துதல் என்பது அடுத்த கட்டம். சந்தைப்படுத்தும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய தயாரிப்பு பொருட்கள் போட்டியாளர் களிடமிருந்து தனித்து தெரிவதற்கு நிறையவே மெனக்கிட வேண்டும்.
*புதுப்புது விஷயங்களை புகுத்தி விளம்பரப்படுத்த வேண்டும். அத்துடன் அத்துறையில் ஏற்கனவே உள்ள போட்டியாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் சிறிய அளவில் தொடங்கி, அனுபவம் பெற்ற பிறகு தொழிலை விரிவுபடுத்துவது சிறந்தது.
*தொழில்நுட்ப ரீதியாக சாதித்தாலும் நம்மைச் சுற்றி நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு அமர்த்த வேண்டும். வியாபாரத்தில் நம்பிக்கை, நாணயம் என்பது மிகவும் முக்கியம். அதேபோல் காலத்திற்கேற்ப வியாபாரத்தை தகவமைத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
*தெரியாத தொழிலில் அவசரப்பட்டு முதலீடு செய்யக்கூடாது. 100% நம்பிக்கை இருந்தால் மட்டுமே இறங்கவேண்டும். தொடக்கத்தில் தோல்விகள் வரலாம். ஆனால் அவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவேண்டும்.
*புதிய வியாபாரம் தொடங்கும் பொழுது சரியான திட்டமிடல், சந்தை ஆய்வு, நிதி மேலாண்மை மற்றும் சட்டபூர்வமான பதிவு (GST, PAN) ஆகியவை மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து, தனித்துவமான சேவையை வழங்குவதன் மூலம் போட்டியை சமாளிக்கலாம். பொறுமை மற்றும் 100% தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், தொடக்ககால தோல்விகளைக் கடந்து வெற்றி பெறமுடியும்.