

கடன் என்பது நோயைப் போன்றது. நோய் வரும் முன் காப்பதென்பது நோய் வந்த பின் காப்பதைவிட சிறப்பானது. அதைப்போலவே, கடன் வரும் முன் காப்பதென்பது கடன் வந்த பின் காப்பதைவிட சிறப்பானது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் நோய் வரும் முன் காப்பதைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்கள்.
எப்பொழுதுமே வரும் முன் காப்போம் என்பது வந்த பின் காப்போம் என்பதைவிட சிறப்பானது. ஏனென்றால், வரும் முன் காப்போம் என்பதன் மூலம் ஒரு நோய் வருவதை நாம் தவிர்த்துக் கொள்கிறோம். அது எளிமையானது. வந்த பின் காப்போம் என்பதில் நோய் வந்த பிறகு, அதனை விட்டு வெளி வருவதற்கு நாம் பல்வேறு முயற்சிகளைச் செய்கிறோம். அது அந்த நோயைச் சரி செய்வதை மட்டுமல்லாமல், பல்வேறு பக்க விளைவுகளையும் தருகிறது. அது கடினமானது.
உதாரணத்திற்கு, ஒருவருக்கு தலை வலி வந்தால், மருந்து உண்ணும் பொழுது, தலைவலி சரி செய்வது மட்டுமின்றி, உடல் முழுவதுமே அந்த மருந்து வேலை செய்கிறது. அதனால் பக்க விளைவுகள் உண்டு. இதைத்தான் தலைவலி போய் திருகுவலி வந்த கதை என்று கூறுவார்கள். அந்தத் தலைவலிக்கு மூல காரணத்தைக் கண்டு அதைச் சரி செய்யும்போது, அந்தத் தலைவலி மறுபடி வராமல் நாம் காத்துக்கொள்ளலாம்.
கடன் என்பது நோயைப் போன்றது. அதற்கான மூல காரணங்களை நாம் கண்டறிந்து அவற்றைத் தவிர்த்துக் கொள்வதன் மூலம் நாம் கடன் என்ற நோயைத் தவிர்த்துக் கொள்ளலாம். கடன் என்பது அடிப்படையில் செலவிற்கு போதிய பணமில்லாமல் இருப்பது. கடன் வருவதற்கான இரண்டு மூல காரணங்கள் பின்வருமாறு;
1. எதிர்பாராத செலவுகளுக்கு போதிய பணம் இல்லாமல் இருப்பது
2. எதிர்பார்த்த செலவுகளுக்கு போதிய பணம் இல்லாமல் இருப்பது
இந்த இரண்டு மூல காரணங்களை நாம் எவ்வாறு தவிர்த்துக் கொள்ள முடியும் என்று பார்க்கலாம்.
1. எதிர்பாராத செலவுகளுக்கு போதிய பணம் இல்லாமல் இருப்பது; இந்த வகையான செலவுகள் எதிர்பாராதவை. அவை முன்கூட்டியே சொல்லிக்கொண்டு வருவதில்லை. திடீரென நம் கண்முன் வருபவை. ஆனால், இத்தகைய செலவுகள் வருவதற்கு வாய்ப்புண்டு என்பது நாம் எதிர்பார்த்ததுதான்.
உதாரணமாக, திடீரென வீட்டின் கூரையில் நீர் கசிவது, திடீரென வாகனம் பழுதாவது, திடீரென குடும்பத்தின் உறுப்பினர் நோய்வாய்ப்படுவது, திடீரென குடும்பத்தின் சம்பாதிக்கும் நபர் இறப்பதன் காரணமாக குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க நேர்வது
இவற்றைக் கடனின்றி கையாள, முன்கூட்டியே அவசர கால நிதி போதிய அளவு வைத்திருக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.
2. எதிர்பார்த்த செலவுகளுக்கு போதிய பணம் இல்லாமல் இருப்பது; இந்த வகையான செலவுகள் எதிர்பார்த்தவை. அவை முன்கூட்டியே நமக்குத் தெரியும். அந்தச் செலவுகளைச் சந்திக்க நமக்கு நிதி தேவைப்படுவதால், அவற்றை நாம் நிதிக் குறிக்கோள்களாக கருத வேண்டும். அத்தகைய நிதிக் குறிக்கோள்களை மூன்று வகைகளாக பிரித்துக்கொள்ளலாம்.
1. குறுகிய கால நிதிக் குறிக்கோள்கள்- 1 முதல் 5 வருடங்களுக்குள் அடைய வேண்டிய நிதிக் குறிக்கோள்கள்.
உதாரணமாக, வருடாவருடம் தீபாவளி கொண்டாட பணம், வாகனம் வாங்க பணம், மின்னணு உபகரணங்கள் வாங்க பணம், வருட இறுதியில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல பணம்
இவற்றைக் கடனின்றி கையாள, வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. நடுத்தர கால நிதிக் குறிக்கோள்கள் - 5 முதல் 10 வருடங்களுக்குள் அடைய வேண்டிய நிதிக் குறிக்கோள்கள்
உதாரணமாக, வீடு வாங்குவதற்கான முன்பணம், வீட்டின் மேல்தளம் அமைக்க பணம்
இவற்றைக் கடனின்றி கையாள, வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. நீண்ட கால நிதிக் குறிக்கோள்கள் - 10 வருடங்களைத் தாண்டிய நிதிக் குறிக்கோள்கள்
உதாரணமாக, குழந்தைகளின் மேல்படிப்பிற்கான பணம், குழந்தைகளின் திருமணத்திற்கான பணம், ஓய்வுகாலத்திற்கான பணம் இவற்றைக் கடனின்றி கையாள, பங்குகள், கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்ட, எதிர்பாராத செலவுகள் மற்றும் எதிர்பார்த்த செலவுகளுக்கு கடன் வாங்காமல் இருக்க நாம் மாதா மாதம் பணத்தை அவற்றுக்காக ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்க பட்ஜெட் அதாவது நிதி திட்டமிடல் செய்யவேண்டும். பட்ஜெட்டின் மூலம் கடனில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
நீங்கள் கடனில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாழ்த்துகள்.