கிரெடிட் கார்டு பயனாளர்களே! இனியும் நீங்கள் ஏமாற வேண்டாம்!

Credit Card payment
Service Charge
Updated on

டிஜிட்டல் பணப் பரிமாற்றம் இன்றைய காலகட்டத்தில் அபரிமிதான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதற்கேற்ப ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சிறிய பெட்டிக் கடையில் கூட தற்போது ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது. இது அவர்களின் வியாபாரத்தைப் பெருக்கும் என்பதும் நிதர்சனம்.

அதேசமயம் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகம். குறிப்பாக தங்க நகைகளை வாங்கும் போது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்களிடம் சர்வீஸ் சார்ஜ் கேட்கிறார்கள். உண்மையில் வாடிக்கையாளர் தான் இந்த சர்வீஸ் சார்ஜை கட்ட வேண்டுமா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.

பொதுவாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், ரிவார்டு பாயிண்டஸ் மற்றும் கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கும். ஆனால் இதற்கு சில நிபந்தனைகளும் உள்ளன. எல்லா இடத்திலும் கேஷ்பேக் கிடைப்பதில்லை. ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் தனித்தனியான சலுகைகள் இருக்கும். அதற்கேற்ப நாம் பயன்படுத்தினால் தான் கேஷ்பேக் கிடைக்கும்.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு முன்பெல்லாம், தங்க நகைகளை வாங்குவோர் பணமாகவே கொடுத்து வந்தனர். ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் மற்ற ஆன்லைன் தளங்களின் மூலமும் சிலர் பணம் செலுத்துகின்றனர். இப்படி ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது கடைக்காரர்கள் சர்வீஸ் சார்ஜ் கட்ட வேண்டும் என சொல்லி, அந்தத் தொகையையும் இதில் இணைத்து விடுகின்றனர். குறிப்பாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் நிச்சயமாக சர்வீஸ் சார்ஜை வசூலித்து விடுகின்றனர்.

உண்மையில் இந்த சர்வீஸ் சார்ஜை கட்ட வேண்டியது வாடிக்கையாளர்கள் அல்ல; கடைக்காரர்கள் தான். கிரெடிட் கார்டு சேவையை அளிப்பதற்காக பணப் பரிவர்த்தனையில் 1.5% முதல் 2% வரை வங்கிகள் கடைக்காரர்களுக்கு நிர்ணயிக்கின்றன. இதற்கான உத்தரவையும் கடந்த 2023 ஆம் ஆண்டில் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது. ஆனால் இந்த சர்வீஸ் சார்ஜை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுகின்றன பல நகைக் கடைகள். இந்தத் தகவலை அறியாத வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சார்ஜை கட்டி ஏமாறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
கார் வாங்க கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது சரியா?
Credit Card payment

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது இனி யாரேனும் சர்வீஸ் சார்ஜை கட்டச் சொன்னால், ரிசர்வ் வங்கி உத்தரவுப் படி அதை நீங்கள் தான் கட்ட வேண்டும் என அழுத்தமாகச் சொல்லுங்கள். அதையும் மீறி அவர்கள் கட்டச் சொன்னால், வேறு கடைக்குச் செல்வது நல்லது. மேலும் இது குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கவும் முடியும்.

கடைக்காரர்கள் எந்த வங்கியைப் பயன்படுத்துகிறார்களோ அந்த வங்கியில், சர்வீஸ் சார்ஜ் பற்றிய புகாரை வாடிக்கையாளர்கள் பதிவு செய்யலாம். புகார் அளித்ததும் வங்கி அதற்கான விசாரணையை மேற்கொண்டு, அந்தக் கடையை பிளாக் லிஸ்டில் சேர்த்து விடும்.

சர்வீஸ் சார்ஜ் தொடர்பான சில வழக்குகள் ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் பூனாவில் நீதிமன்றம் வரை சென்றள்ளன. அதில் வாடிக்கையாளர்கள் தரப்பு வெற்றியும் பெற்றுள்ளன. கிரெடிட் கார்டு பயனாளர்களே இனியும் நீங்கள் ஏமாற வேண்டாம்.

logo
Kalki Online
kalkionline.com