

இன்றைய நவீன பொருளாதார உலகில், 'பங்குச் சந்தை' என்பது கோடிக்கணக்கான மக்களின் கனவுகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக உள்ளது. ஆனால், இந்த பிரம்மாண்டமான வர்த்தக முறை எப்படி உருவானது? உலகின் முதல் பங்குச் சந்தை உருவான சுவாரஸ்யமான வரலாறு போன்றவற்றை இந்தப் பதிவில் காணலாம்.
16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஐரோப்பிய நாடுகள் நறுமணப் பொருட்கள் மற்றும் செல்வங்களைத் தேடி, இந்தியா, இந்தோனேசியா போன்ற கிழக்கு நாடுகளுக்கு கடல் பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டின. மிளகு, ஏலக்காய், பட்டுப்போன்ற பொருட்கள் ஐரோப்பாவில் தங்கத்திற்கு நிகராக மதிக்கப்பட்டன.
இருப்பினும், ஒரு கப்பலைத் தயார் செய்து நீண்ட தூரம் அனுப்பி வைப்பது என்பது கடிமான ஒன்று. இதற்கு அதிக முதலீடு தேவைப்பட்டது. அதுமட்டுமின்றி, கடல் கொள்ளையர்களின் தாக்குதல், மோசமான வானிலை மற்றும் புயல்கள், நீண்ட காலப் பயணம் போன்ற பல ஆபத்துக்கள் இருந்தன. ஒரு கப்பல் மூழ்கினால், அந்தப் பயணத்திற்குப் பணம் போட்ட தனிநபர் முற்றிலும் ஏழையாகிவிடுவார்.
இந்தச் சூழலில்தான், 1602 ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டில் டச்சு கிழக்கு இந்திய நிறுவனம் உருவானது. முதலீட்டு அபாயத்தைக் குறைக்க அந்த நிறுவனம் ஒரு புதிய யோசனையை முன்வைத்தது.
தனிநபர்களிடம் பெரிய தொகையைக் கேட்பதற்குப் பதிலாக, பொதுமக்களிடம் இருந்து சிறிய தொகைகளை முதலீடாகப் பெற்று, அதற்குப் பதிலாக நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதியை வழங்குவதாக அறிவித்தது. இதன் மூலம், கப்பல் மூழ்கினாலும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இழப்பு மிகக் குறைவாகவே இருந்தது. இது உலகின் முதல் பெரிய அளவிலான பொதுமக்கள் பங்கு வெளியீட்டு முறையாக கருதப்படுகிறது.
1602 ஆம் ஆண்டில், இந்த பங்குகளை மக்கள் தங்களுக்குள் வாங்கவும் விற்கவும் ஒரு இடம் தேவைப்பட்டது. இதற்காக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உலகின் முதல் முறையான பங்குச் சந்தை நிறுவப்பட்டது.
தொடக்கத்தில், இது ஒரு கட்டடமாக இல்லாமல், மக்கள் கூடும் இடமாகவும், பாலங்களுக்கு அருகிலும் செயல்பட்டது. பின்னர், 1611 ஆம் ஆண்டில் இதற்காக ஒரு தனி கட்டடம் கட்டப்பட்டது. டச்சு கிழக்கு இந்திய நிறுவனம் மட்டுமே அங்கு பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்யப்பட்ட ஒரே நிறுவனமாகும்.
பங்குச் சந்தை எப்படி வளர்ந்தது?
டச்சுக்காரர்களின் இந்த வெற்றி முறையைத் தொடர்ந்து, பிற நாடுகளும் இதைப் பின்பற்றத் தொடங்கின.
1. லண்டன் பங்குச் சந்தை: இங்கிலாந்தில் உள்ள 'ஜோனதன்ஸ் காபி ஹவுஸ்' என்ற இடத்தில் வர்த்தகர்கள் கூடி பங்குகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர். இதுவே பின்னாளில் லண்டன் பங்குச் சந்தையாக மாறியது.
2. நியூயார்க் பங்குச் சந்தை: 1792-ஆம் ஆண்டில், நியூயார்க்கின் வால் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு 'பட்டன்வுட்' மரத்தின் அடியில் 24 தரகர்கள் ஒன்று கூடி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதுவே இன்று உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தையான NYSE-க்கு அடித்தளமிட்டது.சில சுவாரஸ்யமான தகவல்கள்:
அக்காலத்தில் பங்குகள் டிஜிட்டல் முறையில் இருக்கவில்லை. காகிதங்களில் எழுதப்பட்ட சான்றிதழ்களாகவே வழங்கப்பட்டன.
உலகின் முதல் பெரிய 'பங்குச் சந்தை குமிழி' (Bubble) நெதர்லாந்தில் 'துலிப் மேனியா' (Tulip Mania) என்ற பெயரில் ஏற்பட்டது. அதன் பங்குகளின் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்த பின் சரிந்தது.
இன்று நாம் பயன்படுத்தும் அதிநவீன பங்குச் சந்தை தொழில்நுட்பங்களுக்குப் பின்னால் 400 ஆண்டுகால வரலாறு மறைந்துள்ளது. ஆபத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு எளிய சிந்தனையே இன்று உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளது. சாதாரண மக்களும் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராக மாற முடியும் என்ற நிலையை உருவாக்கிய டச்சு கிழக்கு இந்திய நிறுவனத்தின் முயற்சி, மனித வரலாற்றின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.