

இப்பொழுதும் வீட்டில் ஒருவர் மட்டும் வேலை செய்ய, மற்றவர்கள் அந்த ஒரு சம்பளத்தை மாத்திரமே எதிர்பார்த்து, பொருளாதார தன்னிறைவு அடைய முடியாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன. வீட்டில் இருப்போர் அந்தந்த ஏரியாவில் கிடைக்கும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து சம்பாதிக்கலாம். இதனால் நம்மாலும் சம்பாதிக்க முடிகிறது என்ற சந்தோஷம் ஏற்படும். நேரத்தை சரியான வழியில் செலவிடுகிறோம் என்ற தன்னம்பிக்கைப் பிறக்கும். அதற்கு செய்ய வேண்டியது என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் என்றால் வேலை வாய்ப்புக்கான வழி காட்டுவதையே ஒரு தொழிலாகச் செய்யலாம் .'ரெஸ்யூம்' எனப்படும் பயோடேட்டா தயாரிப்பது உட்பட பல்வேறு உதவிகளைச் செய்து கொடுத்து தகுந்த சன்மானத்தைப் பெறலாம். போட்டோஷாப், இன்-டிசைன் போன்ற கோர்ஸ்களைப் பயின்றால் பத்திரிக்கை அலுவலகங்கள், அச்சகங்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்பு பெறலாம். ஆர்டர் வாங்கி வீட்டில் இருந்தும் தொழில் செய்யலாம்.
வீடியோ எடிட்டிங் செய்வது போன்ற பயிற்சிகளைப் பெற்றால் ஸ்டூடியோக்களில் பணி கிடைக்கும். இல்லை என்றாலும் திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் போன்ற விசேஷ வீடுகளுக்குச் சென்று போட்டோ வீடியோ எடுத்துக் கொடுத்து சம்பாதிக்கலாம்.
நிறைய மொழிகள் தெரிந்திருந்தால் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று அங்கு அயல்நாடு, அயல் மாநிலத்தில் இருந்து வருவோர்களுக்கு அந்தந்த இடத்தின் பெருமைகளை கூறி, ஒரு கைடாக பணிபுரிந்து நல்ல வருமானத்தைப் பெறலாம். இதற்கு மொழிபெயர்ப்பு திறமை அவசியம் வேண்டும்.
வீட்டில் இருக்கும் இடவசதிக்கு தகுந்தாற்போல் காளான் பயிர் செய்து அக்கம்பக்கத்து வீடுகளுக்கு விநியோகித்தால் செலவுக்கு கைகொடுக்கும்.
வாஸ்துக்கு ஏற்ப வண்ண மீன் வளர்ப்பு என்பது நகர்புறங்களில் பரபரப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அவற்றை வாங்கும்போது தொட்டிகள் உட்பட மீன் வளர்ப்புக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி விற்கலாம்.
பொக்கே செய்வதற்கு தேவையான பூ , இலை மற்றும் தேவையான பொருட்களை வாங்கி அவற்றை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்து சம்பாதிக்கலாம்.
அவரவர் வசிக்கும் பகுதியில் எந்தெந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள் அவரவர் வீட்டருகில் கிடைக்கிறதோ அவற்றை வாங்கி விற்கலாம். சுத்தப்படுத்தி, காய வைத்து காய்கறி வற்றல் தயாரிக்கலாம். மொத்த வியாபாரிகளிடம் கொடுப்பதுடன் உங்களுக்கும் வருமானம் வரும்.
கொத்தவரங்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், பாகற்காய் மாங்காய் போன்ற வத்தல்களுக்கு எப்போதும் அவசியம் இருப்பது உண்டு. சில வீடுகளில் பறிக்க ஆள் இல்லாமல் தோட்டத்தில் இவை அப்படியே உதிர்ந்து விழுவதைக் காணலாம். அது போன்ற இடங்களுக்குச் சென்று அவர்களிடம் பேசி சமாதானம் ஆகி விட்டுக் கொடுத்து விற்று அதில் இருந்து சிறிது லாபத்தைப் பெறலாம்.
நெல்லிக்காய் அதிகம் கிடைக்கும் சீசன் என்றால் அதை வாங்கி சுத்தப்படுத்தி ஊறுகாய் போட்டு அல்லது தேனில் ஊறவைத்து நிழலில் காயவைத்து 50 கிராம் 100 கிராம் என பை, பாட்டில்களில் பேக் செய்து மூலிகைக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் கொடுத்து லாபம் பெறலாம். ஆவாரம்பூ, பிரண்டை போன்றவைகளில் ஊறுகாய் செய்து விற்பனை செய்யலாம்.
நர்சரிகளில் அருகில் தோட்டக்கலை மற்றும் வனத்துறையில் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் நாற்றுகளை வாங்கி உங்கள் ஏரியாவில் நன்றாகத் தோட்டம் வைத்திருப்பவர்களை தேடிக் கண்டுபிடித்து விற்கலாம். அதிக லாபம் கிடைக்கும். அதோடு செடிகளுக்கு போடக்கூடிய ஆர்கானிக் உரம், காய்கறி மற்றும் பூச்செடி விதைகள் கூட வாங்கி விற்கலாம். முடிந்தால் உற்பத்தி செய்தும் விற்கலாம்.
விசேஷங்களுக்கு தகுந்தவாறு பூக்களை வாங்கி வந்து விருப்பப்பட்டவர்களுக்கு பூவை கட்டி விற்கலாம். உதிரிப்பூ கேட்பவர்களுக்கு அப்படியே கொடுக்கலாம். அதேபோல் தாம்பூலப்பை செய்து கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். இதுபோல் நிறைய வழிகளில் சம்பாதித்து பொருளாதாரத்தை (part time income ideas) மேம்படுத்தலாம்.