

நாமினி என்பது ஒரு நபர் இறக்கும் பட்சத்தில், அவருடைய வங்கி கணக்கு, காப்பீடு, பங்குகள் மற்றும் சொத்துக்களை பெறுவதற்காக, அந்த நபரால் முன்மொழியப்பட்ட (nominated) சட்டபூர்வமான நபர் தான் நாமினி ஆவார். நாமினி உரிமையாளர் அல்ல. அவர் சொத்துக்களைப் பெற்று, சட்டபூர்வ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பாளர் (trustee) ஆவார்.
மைனர் நாமினி:
மைனரையும் (18 வயதுக்கு உட்பட்டவர்) நாமினியாக நியமிக்கலாம். ஆனால் அவருக்கு ஒரு பாதுகாவலரை (Guardian) குறிப்பிட வேண்டும்.
நிதி சார்ந்த விஷயங்களில் நாமினி (Nominee-வாரிசுதாரர்) நியமிப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பிட்ட சில முக்கியமான இடங்களில் நாமினியை நியமிக்க மறக்கவே கூடாது. விருப்பப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் நாமினியின் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
வங்கி கணக்குகள் (Bank Accounts):
சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு மற்றும் பிக்சட் டெபாசிட்(FD) கணக்குகளில் நாமினி போட வேண்டியது அவசியம். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், அந்த கணக்கில் உள்ள பணத்தை எளிதாகப்பெற நாமினி உதவுவார்.
காப்பீடு (Insurance):
ஆயுள் காப்பீடு (Life Insurance) மற்றும் பொது காப்பீடு (General Insurance) பாலிசிகளில் நாமினி கட்டாயம் போடவேண்டும்.
முதலீடுகள் (Investments):
மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund), பங்குகள் (Shares) மற்றும் டிமேட் கணக்குகளில் (Demat Account) நாமினியை நியமிப்பது முக்கியம்.
பி.எஃப் (EPF/PPF):
வருங்கால வைப்பு நிதி(EPF) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி(PPF) கணக்குகளில் வாரிசுதாரரை நியமிக்க வேண்டியது அவசியம்.
லாக்கர் (Locker):
வங்கியில் உள்ள பாதுகாப்பான லாக்கர் வசதிக்கு நாமினி நியமிக்கப்பட வேண்டும்.
ஏன் நாமினி முக்கியம் தெரியுமா?
நாமினி நியமிப்பது குறிப்பிட்ட அந்த நபர் இல்லாத பட்சத்தில் குடும்பத்தினர் பணத்தை எந்த சட்ட சிக்கலும் இன்றி எளிதாகப் பெற உதவும் மிக முக்கியமான நடவடிக்கையாகும். இது தேவையற்ற காலதாமதம் மற்றும் குடும்பத்தினர் இடையே ஏற்படும் சொத்து தகராறுகளை தவிர்த்து, சொத்துக்களை பாதுகாப்பாக உண்மையான வாரிசுகளிடம் சேர்க்க உதவுகிறது. நாமினி நியமிக்காத பட்சத்தில் கணக்கு வைத்திருப்பவருக்கு பிறகு அந்தப் பணத்தையோ அல்லது சொத்தையோ சட்டப்பூர்வ வாரிசுகள் பெறுவதற்கு பல சட்ட சிக்கல்களையும், நீண்ட கால தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.
நாமினி இல்லையெனில் வாரிசுச் சான்றிதழ் (Succession Certificate) மற்றும் நீதிமன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது நீண்ட காலத்தை எடுத்துக்கொள்ளும். இது நிதி நெருக்கடியில் உள்ள குடும்பத்திற்கு மிகவும் கடினமான சூழ்நிலையைத் தரும்.
எந்த நேரத்திலும் நாம் நியமித்த நாமினியை மாற்றி, புதிய நபரை நியமிக்க முடியும். வங்கி கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை முதலீடு மற்றும் காப்பீட்டு பாலிசிகளில் நாமினி கட்டாயம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.