கடலுக்கு அடியில் இந்தியாவின் தங்க வேட்டை: அலியாபெட் டூ மும்பை ஹை - மிரள வைக்கும் வரலாறு!

Mumbai High ONGC - கச்சா எண்ணெய்
Mumbai High ONGC - கச்சா எண்ணெய்AI Image
Updated on

ரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதிலும், அதன் தொழில்மயமாக்கலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதிலும் ‘எரிசக்தி’ (Energy) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த எரிசக்தியின் முதன்மை ஆதாரமாக விளங்குவது கச்சா எண்ணெய் எனப்படும் பெட்ரோலியம் ஆகும்.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நாட்டின் கச்சா எண்ணெய் தேவைக்கு அஸ்ஸாம் மாநிலத்தின் டிக்பாய் (Digboi) போன்ற சில நிலப்பரப்பு எண்ணெய் வயல்களையே நம்பியிருக்க வேண்டியிருந்தது; நாட்டின் தேவைகள் அதிகரிக்கத் தொடங்கியதும், நிலப்பரப்பைத் தாண்டி கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் இயற்கை வளங்களைத் தேடவேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டது.

அலியாபெட்: இந்தியாவின் கச்சா எண்ணெய் தேடலுக்கு அடித்தளமிட்ட தீவு:

அவ்வாறு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) இந்தியாவின் ஆழ்கடலில் (Offshore) காலடி எடுத்து வைத்த வரலாறு, சவால்களும் சாதனைகளும் நிறைந்தது. கடலில் முதன்முதலில் துளையிட்டு சோதித்துப் பார்த்த குஜராத்தின் அலியாபெட் தீவு, மற்றும் இந்தியாவின் எரிசக்தி தேவையின் முதுகெலும்பாக மாறிய மும்பை ஹை ஆகிய இரு இடங்களின் சுவாரசியமான வரலாற்றுத் தேடலையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் பார்க்கலாம்.

அலியாபெட் (Aliabet): குஜராத்தின் காம்பே வளைகுடாவில் (Gulf of Khambhat), நர்மதை நதி கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு தீவு. 1970 மார்ச் மாதம் 19 ம் தேதி, இந்தியாவின் முதல் ஆழ்கடல் சோதனைத் துளையிடலை (Offshore Exploratory Drilling) அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி வைத்தார். ஆரம்பத்தில் எண்ணெய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும், வணிக ரீதியாக (Commercial Production) தொடர்ந்து பெரிய அளவில் எண்ணெய் எடுப்பதற்கான இருப்பு அங்கு இல்லை. அதனால் வணிக ரீதியாக எண்ணெய் உற்பத்தி செய்யப்படாமல் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதன் முக்கியத்துவம்: இந்தத் திட்டம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், இந்திய பொறியாளர்களுக்கும் ONGC நிறுவனத்திற்கும் ஆழ்கடலில் துளையிடுவது எப்படி என்ற மிகப்பெரிய தொழில்நுட்பப் பாடத்தையும், அனுபவத்தையும், நம்பிக்கையையும் தந்தது.

Mumbai High ONGC - கச்சா எண்ணெய்
Mumbai High ONGC - கச்சா எண்ணெய்AI Image

பொருளாதார திருப்புமுனையை ஏற்படுத்திய ONGC-யின் கச்சா எண்ணெய் உற்பத்தி:

மும்பை ஹை (Mumbai High)

இது அரபிக்கடலில் மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 160 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) தன் ‘சாகர் சாம்ராட்’ (Sagar Samrat) என்ற பிரத்யேக மிதவை துளையிடும் கப்பல் மூலம் 1974 பிப்ரவரியில் இந்த ஆழ்கடல் எண்ணெய் வயலைக் கண்டுபிடித்தது. 1976 மே 21 அன்று முறைப்படி வணிக ரீதியான உற்பத்தி தொடங்கப்பட்டு, இந்தியாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது.

சிறப்பு: இந்தியாவின் உள்நாட்டு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் பூர்த்தி செய்வதில் மும்பை ஹை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியை அசுர வேகத்தில் உயர்த்தியது. நாட்டின் இறக்குமதி தேவையைக் குறைத்து, பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கடலில் முதன்முதலில் எண்ணெய் இருக்கிறதா என சோதித்துப் பார்த்த இடம் அலியாபெட் (குஜராத்). ஆனால், கடலில் இருந்து வெற்றிகரமாக முதன்முதலில் பெட்ரோல்/கச்சா எண்ணெய் எடுத்துப் பயன்படுத்திய இடம் மும்பை ஹை. இதனால்தான் இந்தியாவின் முதல் ஆழ்கடல் எண்ணெய் வயலாக ‘மும்பை ஹை’ அதிகாரப்பூர்வமாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வங்கி தேவையில்லை, ஆப்ஸ் தேவையில்லை! வைர வணிகத்தை ஆளும் 10 ரூபாய் நோட்டின் வலிமை!
Mumbai High ONGC - கச்சா எண்ணெய்

இந்தியாவின் ஆழ்கடல் பெட்ரோலியத் தேடலில் குஜராத்தின் அலியாபெட் என்பது ‘அடித்தளம்’; மும்பை ஹை என்பது ‘மகுடம்’. அலியாபெட் தந்த தொழில்நுட்ப அனுபவமும் துணிச்சலுமே, பின்னாளில் மும்பை ஹையின் பிரம்மாண்ட வெற்றிக்கு வழிகோலியது. தொடக்க கால சவால்களைத்தாண்டி, இந்தியாவின் ஆற்றல் தேவையை நிவர்த்தி செய்வதில் இந்த ஆழ்கடல் கண்டுபிடிப்புகள் இன்றும் நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கின்றன.

இந்தியாவின் எரிசக்திப் பொருளாதாரத்தை இயக்கும் ஆழ்கடல் கச்சா எண்ணெய் உற்பத்தியின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பச் சவால்களையும், நாடு இறக்குமதிச் சுமையைக் குறைத்து தற்சார்பு பெற்ற வரலாற்றுப் பாடத்தையும் தெளிவாகப் புரிந்துகொண்டு, இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சியைக் குறித்த ஒரு புதிய பார்வையைப் பெறலாம்.

Reference: ONGC நிறுவனத்தின் கண்ணோட்டம் மற்றும்...

logo
Kalki Online
kalkionline.com