

தங்களது ஓய்வு காலத்தினை வளமாக்கிக்கொள்ள, எந்த முதலீடுகளில் முதலீடு செய்யலாம் என்பது இன்றைய இளைஞர்களின் கேள்வி. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை இது.
இளைஞர்களின் முன்னே தங்கம், நிலம், பங்குகள், வைப்பு நிதிகள், பரஸ்பர நிதிகள், தொன்மையான ஓவியங்கள், நாணயங்கள், மெய்நிகர் சொத்துகள் போன்ற பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலப் பணப்பெருக்கத்திற்கு பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் சிறப்பானவை. அதாவது, பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகள் சேர்ந்த கலவை. இந்தக் கலவை நீண்ட காலத்தில் நல்லதொரு பணப்பெருக்கத்தினைக் கொடுக்கும்.
இளைஞர்கள் எவ்வாறு பணத்தைப் பெருக்குவது ?
சீக்கிரமாக முதலீட்டினைத் தொடங்க வேண்டும்.
நீண்ட காலம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இதன் மூலம், ஓய்வு காலத்திற்கு நல்லதொரு பணப் பெருக்கத்தினை அடைய முடியும்.
110 - வயது ஃபார்முலா (சாம்யம்) குறிப்பிட்ட வயதில் ஒருவர் எத்தனை சதவீதம் முதலீடு செய்யலாம் என்பதை குறிப்பிடுகிறது, இந்த ‘110 – வயது’ என்ற பார்முலா.’ அதன்படி, ஒரு இளைஞரின் வயது 30 என்றால், 110 - வயது என்ற சாம்யத்தின்படி, தன்னிடம் உள்ள சேமிப்புக்கான பணத்தில், 80% முதலீடு பங்குகளில் செய்யலாம். மீதமுள்ள 20% கடன் பத்திரங்களில் செய்யலாம் என்பது பொதுவான கருத்து. பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதிலாக, பங்குச் சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள்(index funds) போன்ற பரவலான முதலீடுகளில் ஈடுபடலாம். அதனைப் போலவே, கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீடுகளுக்கு அரசாங்கத்தின் கடன் பத்திரங்கள் சார்ந்த கில்ட் பரஸ்பர நிதிகளில்(gilt funds) முதலீடு செய்யலாம்.
உதாரணமாக, ஒருவரிடம் மாதம் 10000 ரூபாய் முதலீடு செய்ய முடியுமென்றால், 80 -20 விகிதாச்சாரத்தின் படி, 8000 ரூபாய் பங்குச் சந்தை குறியீட்டு பரஸ்பர நிதியிலும், மீதமுள்ள 2000 ரூபாய் பணத்தை அரசாங்க கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதியிலும் முதலீடு செய்யலாம்.
வருடா வருடம் சமன்படுத்துதல் (Annual rebalancing) அவசியம்
வருடா வருடம், இந்த சாம்யத்தின்படி (110- வயது) வருடாந்திர சமன்படுத்துதல் செய்ய வேண்டும். ஏனென்றால், காளை சந்தை அல்லது கரடி சந்தையில், ஏற்பட்ட அதிக லாபத்தினை, மறுமுதலீடு செய்து சாம்யத்தின்படி, விகிதாச்சாரத்தினை வருடாவருடம் காக்க வேண்டும். அப்போதுதான், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களின் லாபத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உதாரணமாக, மேலே சொன்ன 80-20 விகிதாச்சாரத்தின் படி, மாதா மாதம் ரூபாய். 10000 முதலீடு செய்தால், வருட இறுதியில் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பர நிதியில் 96000 ரூபாயும், கடன் பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதியில் 24000 ரூபாயும் முதலீடு ஆகியிருக்கும். அந்த வருடம், காளை சந்தையாக இருப்பதாகக் கொள்வோம். 96000 ரூபாய், 150000 என மாறி விட்டது. 24000 ரூபாய், 30000 ரூபாயாக மாறிவிட்டது. இப்போது, முதலீடு 180000 ரூபாயாக மாறிவிட்டது. 80 -20 என்ற விகிதாச்சாரம், 83 - 17 என மாறி விட்டது. மறுபடியும், 80 -20 என விகிதாச்சாரத்தை சமன்படுத்த வேண்டும். எனவே, 3% அதிகமான பங்குச் சந்தைக் குறியீடு பணத்தை மீட்சி செய்து, கடன்பத்திர பரஸ்பர நிதியில் போட வேண்டும். இதன் மூலம், இன்னும் அதிகமான பணப் பெருக்கத்தினை அடைய முடியும்.
வயது ஏற ஏற, பங்குச் சந்தையில் பணத்தை இழக்கும் அபாயத்தினை தாங்கும் அளவு இளைஞர்களுக்கு குறைகிறது. எனவே, விகிதாச்சாரத்தினை வருடா வருடம் மாற்ற வேண்டும். வருடா வருடம், சம்பளம் கூடும் போது, முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், பணவீக்கத்தினைச் சமாளிக்க முடியும்.
-வெங்கடராமன் ராமசுப்ரமணியன்