

பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) என்பது விபத்து மரணம் மற்றும் ஊனமுற்றோருக்கான மத்திய அரசின் மலிவு விலை காப்பீட்டுத் திட்டமாகும். 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் ஆண்டிற்கு ரூ.20 பிரீமியத்தில், விபத்தினால் ஏற்படும் இறப்பு அல்லது முழு ஊனத்திற்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இது ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை ஒரு வருடம் செல்லுபடியாகும். இதனை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இது ஒரு 'Risk Cover' திட்டம். மருத்துவக் காப்பீடு (Health Insurance) அல்ல. இந்த ஒரு வருட திட்டத்தில் இணையலாம். இது ஆண்டுதோறும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
பூகம்பம், வெள்ளம் மற்றும் பிற இயற்கை சீற்றங்கள் போன்ற இயற்கை பேரிடர்களின் விளைவாக ஏற்படும் எந்த ஒரு மரணம் மற்றும் ஊனமும் இத்திட்டத்தின் (PMSBY) கீழ் உள்ளடக்கப்பட்டு நிதி வழங்கப்படுகிறது.
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு சாலை, ரயில் மற்றும் அதுபோன்ற வாகன விபத்துக்கள், மரணம் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் அந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறமுடியும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
18 வயது முதல் 70 வயது வரை உள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://jansuraksha.gov.in க்குச் சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய அம்சங்கள்:
மிகவும் மலிவான விபத்து பாதுகாப்பு.
எளிய பதிவு மற்றும் புதுப்பித்தல்.
ஒருவர் தமது வசதிக்கேற்ப இந்தத் திட்டத்தில் சேரலாம் மற்றும் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். இந்தத் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொடரவேண்டும் என்ற கட்டாய விதி எதுவும் இல்லை.
கணக்கில் போதுமான இருப்பு இல்லாத பட்சத்தில், வங்கிக் கணக்கை மூடினால் அல்லது 70 வயதை அடைந்தால் இத்திட்டம் தானாகவே முடிவுக்கு வரும்.
ஒரு காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுத்த பிறகு, பாலிசிதாரர் உரிமை கோருவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டும். ஆனால் இத்திட்டத்தைப் பொறுத்தவரை காத்திருப்புக் காலம் என்று எதுவும் இல்லை. பதிவு முடிந்தவுடன் காப்பீடு தொடங்குகிறது.
விபத்து காரணமாக ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்து குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
விபத்து மரணம் அல்லது நிரந்தர முழு ஊனத்திற்கு ரூபாய் 2 லட்சம், பகுதி ஊனம் ஒரு கண், ஒரு கை அல்லது ஒரு காலை இழந்த ஊனத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். பாலிசிதாரரின் மரணம் ஏற்பட்டால் நாமினி காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.