தங்க நகை விலை உயர்வால் பாதிக்கப்படும் நகை ஆபரண உற்பத்தி தொழிலாளர்கள்.
தங்கம் ஆடம்பர பொருளாக இருந்தாலும் தங்கத்தை பயன்படுத்துவது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக உலகிலேயே இந்தியாவில் தான் அதிக அளவில் மக்களால் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய இந்திய மக்களின் தங்கப் பயன்பாடு என்பது கௌரவம், பாரம்பரியம், மரியாதை, பொருளாதாரம் என்பதை தாண்டி எளிய குடும்பங்களுக்கான அவசர செலவுகளை சமாளிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. இப்படி பல்வேறு காரணங்களுக்காக தங்கப் பயன்பாடு தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
ஒருபுறம் தேவை அதிகரித்து வருவதால் மறுபுறம் அதனுடைய விலையும் தொடர் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. தற்போது ஒரு பவுன் தங்கம் 47,000 க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் சாமானியர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் திருமணங்களுக்கு போடப்படும் தங்கத்தின் அளவை குறைத்து இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, எளிய குடும்பத்தினர் 5 வருடத்திற்கு முன்பு 10 பவுன் நகை அணிவித்து தனது முதல் பெண்ணுக்கு திருமணம் செய்த குடும்பத்தினர். 2வது பெண்ணின் திருமணத்திற்கு 5 பவுன் நகை அணிவித்து திருமணம் செய்கின்றனர். காரணம் விலை ஏற்றும்.
இந்த நிலையில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் தங்க நகை தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கு அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. கோயம்புத்தூரில் செய்யப்படும் தங்க நகைகள் இந்தியா முழுவதும் பல்வேறு நகை கடைகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இங்கு சுபமுகூர்த்த நாட்களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 200 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது அது 100 கிலோவாக குறைந்திருக்கிறது என்று தங்க நகை ஆபரண உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி 50 சதவீதம் அளவிற்கு விற்பனை குறைவதற்கு முக்கிய காரணம் விலையேற்றம். இதே நிலை தொடரும் பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு பவுன் நகை 50 ஆயிரத்து எட்டி விடும். இதனால் பல தொழிலாளர்களுக்கு வேலைக் கிடைக்கவில்லை. வருமானப் பற்றாக்குறை காரணமாக மாற்றுத் தொழிலை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
இதை தடுக்க ஒன்றிய அரசு தற்போது தங்கத்திற்கு 3 சதவீத ஜிஎஸ்டியும், 15 சதவீத இறக்குமதி வரியையும் விதித்து இருக்கிறது. அவற்றை குறைக்கும் பட்சத்தில் நகை ஆபரணம் செய்யும் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.