

இன்றைய காலகட்டத்தில் பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கடினமோ, அதை சரியாக நிர்வகிப்பது அதைவிட பெரிய சவாலாக மாறிவிட்டது. பலரும் தங்களுக்கு தேவையற்ற பொருட்களை வாங்கி குவித்துவிட்டு, மாத இறுதியில் பணக்கஷ்டத்தில் தவிப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், நாம் மினிமலிசம் (Minimalism) எனப்படும் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
குறைவான பொருட்களைக் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழ்வது தான் இதன் அடிப்படை. உங்களின் நிதி நிலையை எப்போதும் பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் வைத்துக்கொள்ள உதவும் சில முக்கியமான மினிமலிச பணக் கட்டுப்பாட்டு விதிகளைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.
30 நாட்கள் விதி!
நாம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போதோ அல்லது மால்களுக்கு செல்லும்போதோ சில பொருட்களை பார்த்த உடனே வாங்க தோன்றும். அந்த தூண்டுதலை கட்டுப்படுத்த இந்த முப்பது நாட்கள் விதி (30-Day Rule) பெரிதும் உதவுகிறது. ஒரு பொருளை வாங்க வேண்டும் என நினைத்தால், உடனே வாங்காமல் முப்பது நாட்கள் பொறுமையாக காத்திருங்கள்.
முப்பது நாட்களுக்குப் பிறகும் அந்தப் பொருள் உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்பட்டால் மட்டும் அதை வாங்குங்கள். இதன் மூலம் உங்களின் தேவையற்ற ஆடம்பர செலவுகள் பெரிய அளவில் குறையும்.
எண்ணிக்கையை விட தரம் முக்கியம்!
மினிமலிசத்தின் மிக முக்கியமான விதிகளில் ஒன்று தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது. பத்து மலிவான ஆடைகளை வாங்குவதற்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய இரண்டு தரமான ஆடைகளை வாங்குவது சிறந்த முதலீடாகும். மலிவான பொருட்கள் சீக்கிரமே வீணாகிவிடும் என்பதால், மீண்டும் மீண்டும் பணத்தை செலவழிக்க நேரிடும். தரமான பொருட்களுக்கு ஆரம்பத்தில் சற்று கூடுதல் பணம் செலவானாலும், நீண்ட கால அடிப்படையில் அது உங்களுக்கு மாபெரும் சேமிப்பைத் தரும்.
வரவு செலவு திட்டம்!
பணம் எங்கு செல்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்வது நிதி மேலாண்மையின் முதல் படியாகும். ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் உங்களின் சம்பளம் வந்தவுடன் ஒரு முறையான பட்ஜெட் போடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உங்களுடைய அத்தியாவசிய தேவைகள், சேமிப்பு மற்றும் ஆடம்பர செலவுகள் என பணத்தை பிரித்து செலவு செய்வது உங்களின் கட்டுப்பாட்டை அதிகரிக்கும். Excel Sheet அல்லது Mobile Apps பயன்படுத்தி செலவுகளை குறிப்பது மிகவும் நல்ல பழக்கமாகும்.
அவசர கால நிதி!
எதிர்பாராத மருத்துவ செலவுகள் அல்லது திடீர் வேலை இழப்பு போன்ற சிக்கலான நேரங்களில் நம்மை காப்பாற்ற அவசர கால நிதி மிக மிக அவசியம். உங்களின் மாத செலவை போல சுமார் ஆறு மடங்கு தொகையை ஒரு தனி சேமிப்பு கணக்கில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். இந்த சேமிப்பு உங்களுக்கு ஒரு மாபெரும் மன அமைதியை தருவதோடு, எக்காலத்திலும் உங்களை நிதி நெருக்கடியில் சிக்க விடாமல் ஒரு கவசம் போல பாதுகாக்கும்.
கடன் இல்லாத வாழ்க்கை!
தற்போதைய காலத்தில் EMI) மற்றும் Credit Card மோகம் மக்களை அதிக கடனில் தள்ளுகிறது. வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதி கடனை அடைக்கவே சரியாக இருந்தால், வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினம். எனவே, அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற ஆடம்பர விஷயங்களுக்கு கடன் வாங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வாங்கிய கடனை முன்கூட்டியே அடைக்க முயற்சி செய்வது உங்களை நிதி சுதந்திரத்தை நோக்கி வேகமாக அழைத்துச் செல்லும்.
இந்த எளிய விதிகளை உங்களின் அன்றாட வாழ்வில் ஒரு பழக்கமாக மாற்றி வாருங்கள். எந்த ஒரு பொருளாதார நெருக்கடியிலும் நீங்கள் அசைக்க முடியாத அளவுக்கு, உங்களின் நிதி நிலை எப்போதும் சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். நிதி சுதந்திரம் அடைந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.