

பள்ளியில் மொழிகள், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் என எல்லாம் கற்று தருகிறார்கள். ஆனால் பணத்தை எப்படி நிர்வகிப்பது, சேமிப்பது எனக் கற்றுத்தருவதில்லை. பெற்றோர்கள்தான் அதைக் கற்றுத்தர வேண்டும். ஆனால் பெரியவர்களுக்கும் சிலருக்கு தெரிவதில்லை.
பணத்தை திட்டமிடுவதற்கும், சேமிக்கவும் பெரிய பொருளாதார மேதையாக இருக்கவேண்டும் என்பதில்லை. உங்கள் கைக்கு வரும் பணம் எப்படி, எங்கு போகவேண்டும் என்பதை தீர்மானிக்க சில வழிகள்.
வருமானத்தில் செலவுபோக மிஞ்சுவைதைச் சேர்த்து வைப்பதுதான் சேமிப்பு, என சில பேர் தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் சேமிப்பைத் தனியாக எடுத்து வைத்து விட்டு மீதிப் பணத்தைத்தான் செலவழிக்க வேண்டும்.
இளம் வயதில் வேலையில் சேர்பவர்கள் தங்கள் வருமானத்தில் 50 சதவீதம் வரை சேமிக்க முடியும். குடும்ப பொறுப்புகள் வந்த பின் செலவுகள் அதிகமாகலாம். அப்போதும் வருமானத்தில் 15 சதவீதம் வரை சேமிக்கத் தவறக்கூடாது. இப்படிச் செய்தால் எதற்காகவும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஒற்றை வருமானத்தை மட்டும் நம்பி இருக்காதீர்கள். உங்கள் திறமையை வைத்து ஏதாவது பகுதி நேர வேலை செய்யலாம் அல்லது நீங்கள் சம்பாதிப்பது போலவே உங்கள் பணத்தையும் உங்களுக்காகச் சம்பாதிக்க வையுங்கள். வீட்டு மனை வாங்குவது, கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது அதிக பணம் வரும் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வது போன்றவை வருமானம் ஈட்டித்தரும்.
அவசர செலவுகளுக்காக என்று கொஞ்சம் பணம் தனியாக வைத்திருங்கள். உங்கள் குடும்பத்துக்கு ஒரு மாதத்தில் எவ்வளவு செலவாகிறதோ அதைப்போல மூன்று மடங்குப் பணம் இப்படத் தனியாக இருக்கட்டும். இந்தப் பணத்தை எதற்காகவும் எடுத்துச் செலவு செய்யாதீர்கள்.
உங்கள் குடும்பச் சூழலைப் பொறுத்து சேமிப்பு மற்றும் முதலீடுகளைத் திட்டமிடுங்கள். பங்குச்சந்தை போன்ற சில வகை முதலீடுகளில் ரிஸ்க் அதிகம். கிடைக்கும் லாபமும் அதிகம். ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் ரிஸ்க் குறைவு. லாபமும் குறைவு. நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதைப் பொறுத்து முதலீடு செய்யுங்கள். தேவை என்றால் நிதி நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்கலாம்.
'வட்டியில்லாக் கடன்' என்று ஆசை காட்டி தரப்படும் கடன்களின் பின்னால் வேறு கட்டணங்கள் ஒளிந்திருக்கும். வீடு, வாகனம், கல்வி போன்ற தேவைகளை தாண்டி வேறு எதற்கும் மாதத்தவனை என்ற வலையில் விழாதீர்கள். நீங்கள் கட்டும் மாத தவணைகள் உங்கள் வருமானத்தில் 30 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது உங்கள் வருமானத்தில் 50 சதவீதத்துக்கு மேல் மாத தவணைஙகளுக்கே போனால் நீங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாக அர்த்தம்.
ஒரு பக்கம் கடனுக்கு அதிக வட்டி கொடுத்துக்கொண்டு இன்னொரு பக்கம் சேமிப்பு செய்யாதீர்கள். உங்கள் சேமிப்புக்கு கிடைக்கும் வட்டியை விட கடனுக்கு நீங்கள் தரும் வட்டி அதிகமாக இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் முதலில் கடனை அடைத்துவிட்டு அப்புறம் சேமிக்க தொடங்குங்கள்.
கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். அதில் நீங்கள் செலவழிப்பது யாரோ தரும் பணம் இல்லை. அதுவும் உங்கள் பணம்தான் என்ற தெளிவுவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை கட்டாவிட்டால் அதற்கு வட்டியும் எகிறும் என்று தெரிந்துகொண்டு உபயோகப்படுத்துங்கள்.
இரண்டே ஆண்டுகளில் இரண்டு மடங்காக ஆகிவிடும் என்பது போல செல்லும் மோசடி நபர்களிடம் ஏமாறாதீர்கள். உங்களை ஒருவர் சேர்ப்பார், நீங்களும் நான்கு பேரும் சேர்க்கவேண்டும் என்பது போன்ற எந்த பணச் சுழற்சித் திட்டங்களிலும் சேராதீர்கள்.
குடும்பத்துக்குப் போதுமான அளவு மருத்துவ காப்பீடு செய்துகொள்ள வேண்டும். இதேபோல 'டெர்ம் பாலிசியும்' அவசியம். இதில் அதிக தொகைக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். கட்டும் பணம் திரும்ப கிடைக்காது. ஆனால் எதிர்பாராத கஷ்டங்களின்போது குடும்பத்திற்கு கை கொடுக்கும்.
சம்பாதிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது என்று மட்டுமே இருந்தால் வாழ்க்கை அலுத்துவிடும். குடும்பத்தினர் அனைவரும் உற்சாகமான மனநிலையில் இருக்க சில கேளிக்கைகளும் அவசியம். கோயில் களுக்குச் செல்வது, உறவினர் வீடுகளுக்கு சென்று வருவது, சுற்றுலா செல்வது போன்றவையும் அவசியம்.