2023 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனம் எண்ணிக்கை உயர்வைக் கண்டிருக்கிறது.
சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக 2023 ஆம் ஆண்டு பொருளாதார பின்னடைவு ஆண்டாக உலகம் முழுவதும் கருதப்பட்ட நிலையில் இந்தியா தப்பித்து, தன்னுடைய பொருளாதார நிலையை தக்க வைத்துக் கொண்டு முன்னேற்றத்தை சந்தித்திருக்கிறது. இந்தியாவில் உள்ள பாதுகாப்பான சூழல், போக்குவரத்து, அரசின் நம்பகத்தன்மை, மாநில அரசுகள் காட்டும் ஆர்வம், மாநில அரசுகள் நடத்தும் முதலீட்டாளர் மாநாடு, சிறுகுறி நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சலுகை திட்டம், இயற்கை சூழல், மக்கள் தொகை ஆகியவை இந்தியாவில் புதிய தொழில் தொடங்க முக்கிய காரணமாக உள்ளது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதி வரை இந்தியா முழுவதும் 1.96 லட்சம் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நடுத்தர மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கி இருக்கின்றன. இதன் காரணமாக இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சி மீட்கப்பட்டிருக்கிறது.
மேலும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறைகள் வளர்ச்சியை கண்டிருக்கின்றன என்று ஒன்றிய கார்ப்பரேட் விவகார துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல் 2022 ஆம் ஆண்டு 1.88 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு தொழில் நிறுவனம் உருவாக்கத்தில் இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது.
மேலும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களும் இந்தியாவை மையமாகக் கொண்டு தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்த ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றனர். இதற்காக நடைமுறைகள் மேலும் எளிமை படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.