சர்வதேச அளவில் சுற்றுலா துறை முன்பை விட நன்கு விரிவடைந்துள்ளது. முன்பெல்லாம் இந்தியர்களின் சுற்றுலா என்பது அருகில் உள்ள மலைப்பிரதேசங்கள், கடற்கரை, ஆன்மீகத் தளங்கள் இவற்றை சுற்றியே இருக்கும். அதுவும் ஒரு சில நாட்களில் இந்த சுற்றுலா முடிவுக்கு வந்து விடும். அதிகபட்சம் அண்டை மாநில எல்லைக்கு அருகில் சென்று வருவார்கள்.
இன்றோ சுற்றுலா என்பது கடல் கடந்து நாட்டை விட்டு செல்வது, ஆடம்பரமான ஹோட்டல்களில் தங்கி, மகிழ்ச்சிகரமாக பணத்தை செலவு செய்வதாக உள்ளது. இது போன்ற சுற்றுலா செல்வதற்கு குறைந்த பட்சம் 4 லட்சத்தில் இருந்து சராசரியாக 10 லட்சம் வரை செலவாகிறது. தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் பட்ஜெட் பிரண்ட்லியாகவும் ஐரோப்பிய நாடுகள் கட்டுக்கடங்காத செலவுகளை வைப்பதாகவும் உள்ளன.
சுற்றுலாப் பயணங்களுக்கு ஆகும் செலவு அதிகமாக இருப்பதால், ஒரு சிலர் தனிநபர் கடன் எடுத்து சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்பவர்களில் கால் பங்கிற்கும் மேல் தனிநபர் கடன்களை வங்கிகளில் பெற்று செல்கின்றனர். சமீபத்தில் லோன் தரகு நிறுவனமான பைசாபஜார் நடத்திய கணக்கெடுப்பில் இந்த விவரங்கள் கண்டறியப்பட்டன.
நாட்டில் உள்ள 97 நகரங்களில் உள்ள 5,700 பேரிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களின் வேலை, விருப்பமான சுற்றுலாத் தளங்கள், அதிகமாக பயணம் மேற்கொள்ளும் மாதங்கள் ஆகியவை ஆராயப்பட்டன. இதன்மூலம் தனிநபர் கடன் பெற்று விடுமுறைக்கு சுற்றுலா செல்பவர்களின் மனநிலையை கணிக்க முடியும்.
பெருநகர வாசிகள் விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வதை விரும்புகின்றனர். டெல்லி, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வது சமூக அந்தஸ்தை தீர்மானிக்கிறது அல்லது நாகரீகமாக கருதப்படுகின்றது. இதற்காக அவர்கள் கடன்களை வங்கிகளில் பெறுகின்றனர்.
2023 ஆம் ஆண்டு விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்பவர்களில் 21% பேர் தனி நபர் கடன் வாங்கியிருந்தனர். இதுவே 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுற்றுலா சென்றவர்களில் 27% பேர் தனிநபர் கடனைப் பெற்றிருந்தனர். இரண்டு ஆண்டுகளில் விடுமுறை தினங்களைக் கொண்டாட கடன் பெருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தேசிய அளவில் கடன் பெறுவோர்களின் முதன்மைக் காரணமாக சுற்றுலா உள்ளது. இரண்டாவதாக 24% பேர் வீட்டினை புதுப்பிக்க கடன் பெற்றுள்ளனர். மூன்றாவது 11% பேர் கிரெடிட் கார்ட் பில்லினை அடைக்க கடன் பெறுகின்றனர். மருத்துவ அவசர நிலைக்காக கடன் பெறுதல் நான்காவது இடத்திலும் கல்விக்காக கடன் வாங்குவது ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
விடுமுறைக் கடன்கள் யாவும் சிறிய அளவில், அவர்களின் கடன் அடைக்கும் தகுதிக்கு ஏற்ப எடுத்துக் கொண்டுள்ளனர். ₹1 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை கடன் 30% பேர் வாங்கியுள்ளனர். ₹50,000 முதல் ₹1 லட்சம் வரை 20% பேர் வாங்கியுள்ளனர். ₹3 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை 19% பேர் வாங்கியதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விடுமுறை சுற்றுலாக் கடன்களில் 50%க்கும் அதிகமானவை டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரவாசிகளால் பெறப்பட்டன. மும்பையில் 15% பேரும் பெங்களூருவில் 14%பேரும், சென்னை, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் தலா 6% பேரும் சுற்றுலா கடன்களைப் பெற்றுள்ளனர்.