மாதாந்திர வருவானம் கிடைக்கும் அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்!

Post office Saving scheme
Post office Saving scheme
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

இன்றைய சேமிப்பு எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நாளைய பாதுகாப்பிற்கான நமது நிதி முதலீடுகளில் அதிக கவனம் தேவை. பலரும் பாதுகாப்பான நிதி முதலீடுகளைத் தான் எதிர்ப்பார்க்கின்றனர். அவ்வகையில் மத்திய அரசின் உத்தரவாதம் பெற்ற அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள் தான் பொதுமக்களுக்கு முதல் தேர்வாக இருக்கிறது.

சேமிப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தும் பொதுமக்கள், அதிக வட்டியை அளிக்கும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு வட்டி விகிதம் அதிகம். சிலர் சேமிப்புத் திட்டத்திலேயே மாதாந்திர வருமானம் கிடைக்கும் படியான திட்டங்களைத் தேடுகின்றனர். அவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அஞ்சல் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் இருக்கிறது.

மாதாந்திர வருமானத் திட்டம்:

அஞ்சல் அலுவலகத்தின் மாத முதலீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் சேமிப்பு காலம் 5 ஆண்டுகள் ஆகும். ரூ.9 லட்சத்தை நீங்கள் மொத்தமாக முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு வட்டி மட்டும் ரூ.3,33,000 கிடைக்கும். இதன் மாதாந்திர வட்டி வருவாய் ரூ.5,550 ஆகும். இந்த வட்டித் தொகையை மாதா மாதமும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது 5 வருடத்திற்குப் பிறகு மொத்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மாதாந்திர வருவாய் திட்டத்தில் அதிகபட்சமாக தனிநபர் ஒருவர் மொத்தமாக ரூ.9 லட்சம் வரையிலும், ஜாயின்ட் அக்கவுன்டில் இருவராக சேர்ந்து ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் விரும்பினால் முதிர்ச்சி தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதேவேளையில் இந்த சேமிப்புத் திட்டத்தை ஐந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

ஒவ்வொரு ஐந்தாண்டின் முடிவிலும் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் விருப்பத்தை நீங்கள் பெறலாம் அல்லது நீட்டித்துக் கொள்ளலாம். வட்டி வருவாய் தொகை மாதா மாதம் உங்களின் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. இருப்பினும், உங்களுக்கு அளிக்கப்படும் வட்டிப் பணத்திற்கு வரி விதிக்கப்படலாம்.

இதையும் படியுங்கள்:
அஞ்சலக சேமிப்பு எனும் அருமையான முதலீட்டு வாய்ப்புகள்!
Post office Saving scheme

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் சிலர் தங்கள் கணக்குகளை சில காரணங்களுக்காக முன்கூட்டியே முடித்துக் கொள்வார்கள். இதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. இத்திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை முதிர்ச்சி ஆண்டுக்கு முன்கூட்டியே திரும்பப் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் ஓராண்டு கழித்து தான் செய்ய முடியும். கணக்கு தொடங்கிய ஓராண்டிற்குள் கணக்கை முடித்துக் கொள்ள முடியாது. ஒருவேளை அப்படிச் செய்ய வேண்டுமானால் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 1 முதல் 3 ஆண்டுகளில் பணத்தைத் திரும்பப் பெற நினைத்தால் முதலீட்டுத் தொகையில் 2% பிடித்தம் செய்யப்பட்டு மீதிப் பணம் திருப்பி அளிக்கப்படும்.

logo
Kalki Online
kalkionline.com