

குழந்தை இல்லா தம்பதிகள் (DINK - Double Income, No Kids) தங்களின் நிதி பாதுகாப்பை உறுதிசெய்ய வலுவான ஓய்வூதியத் திட்டம், போதுமான மருத்துவக்காப்பீடு, அவசரக்கால நிதி மற்றும் உயில் எழுதுதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதிக செலவழிப்பு வருமானம் இருப்பதால், முதலீடுகளை அதிகப்படுத்தி, சொத்துக்களைப் பன்முகப்படுத்துதல், அவசரக்கால நிதி மற்றும் முறையான முதலீட்டுத் திட்டமிடல் மூலம் எதிர்கால நிதி சுதந்திரத்தை அடையமுடியும்.
வலுவான ஓய்வுக்காலத் திட்டம் (Retirement Planning):
குழந்தை இல்லாத தம்பதிகள் முதுமையில் தங்களை கவனித்துக் கொள்ள நிதியுதவி மிகவும் அவசியம். NPS, EPF மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக முதலீடு செய்யவேண்டும். பணவீக்கத்தை மீறிய முதலீடு அதாவது நீண்ட காலத்திற்கு பங்குகளுடன் கூடிய (equity) பரஸ்பர நிதிகள் (Mutual Funds) மற்றும் NPS(National Pension System) மூலம் முதலீடு செய்து பணவீக்கத்தை வெல்ல வேண்டும்.
அவசரக்கால நிதி (Emergency Fund):
6 முதல் 12 மாதங்களுக்கான குடும்பச் செலவை லிக்விட் ஃபண்ட் அல்லது சேமிப்பு கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். இது வேலை இழப்பு, மருத்துவ அவசர நிலை அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடிகளை சமாளிக்க உதவும். இந்த நிதியை உடனடியாக எடுக்கக்கூடிய சேமிப்புக் கணக்கு, ஃபிக்சட் டெபாசிட் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் தொகையை அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மருத்துவக் காப்பீடு (Health Insurance):
தனிப்பட்ட மருத்துவக் காப்பீடு மற்றும் கிரிட்டிகல் இல்னஸ் பாலிசிகளை எடுத்துக்கொள்வது மருத்துவ செலவுகளில் இருந்து பாதுகாக்கும். தனிநபர் மருத்துவக் காப்பீடு மிகவும் முக்கியம். மூத்த வயதில் தேவைப்படும் உதவியாளர் (attender) மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு என்று தனியாக ஒரு 'Long-term Care Fund' உருவாக்க வேண்டும்.
கணவன் மனைவி இருவருக்கும் தனித்தனி பாலிசிகளை (Individual Policies) எடுப்பது சிறந்தது. இது அதிக காப்பீட்டுத் தொகையை உறுதி செய்வதுடன், வயதான காலத்தில் தனி நபர் தேவைகளைச் சிறப்பாக பூர்த்தி செய்யும். தனிநபர் பாலிசி எடுப்பது, ஒருவர் நோய்வாய்ப்பட்டாலும் மற்றவரின் காப்பீட்டுத்தொகை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
உயில் மற்றும் நாமினேஷன் (Will & Nomination):
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை நிர்வகிக்க நம்பகமான நபர் அல்லது அறக்கட்டளையை நியமித்து, முறையாக உயில் எழுதி வைக்க வேண்டும். சொத்துக்களை பிரித்தளிப்பதில் தெளிவு இருக்க வேண்டும். நாமினி விவரங்களை முறையாகப் புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள் சொத்துக்கள் யாரிடம் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு தெளிவான உயிலை பதிவு செய்து வைத்திருப்பது நல்லது. ஒருவருக்கு சொத்தை எழுதி வைத்த பிறகு அவர் உங்களை பராமரிக்கத் தவறினால், அந்த சொத்து மாற்றத்தை செல்லாததாக்கி மீண்டும் பெற்றுக்கொள்ளும் உரிமையும் மூத்த குடிமக்களுக்கு உண்டு.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு (Eldercare Planning):
தங்களுக்குப் பிறகு அல்லது முதுமையில் யாரை நம்பி இருப்பது, சுகாதார முடிவுகளை எடுப்பது யார் (Power of Attorney) என்பதை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
முதலீடுகளைப் பன்முகப்படுத்துதல்:
அதிக ஆபத்துள்ள (Equity) மற்றும் குறைந்த ஆபத்துள்ள (Debt) முதலீடுகளுக்கு இடையே சரியான சமநிலையைப் பேண வேண்டும். குழந்தை இல்லா தம்பதிகளுக்கு நிதி சுதந்திரம் அதிகம். ஆனால் பொறுப்பும் அதிகம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.