
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(Senior Citizen Savings Scheme - SCSS) என்பது 60 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கான அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இது கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன், வழக்கமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. இது அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் கிடைக்கும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாகும்.
இதன் முக்கிய அம்சங்கள்:
1. முதலீட்டு வரம்பு மற்றும் கால அளவு
குறைந்தபட்ச முதலீடு ஆயிரம் ரூபாய் மற்றும் அதன் மடங்குகளில், அதிகபட்ச முதலீடு 30 லட்சம் ரூபாய் வரையாகும். ஒரு லட்சத்திற்கு குறைவாக இருந்தால், ரொக்கமாக டெபாசிட் செய்யலாம். ஆனால், ஒரு லட்சத்தைத் தாண்டினால் காசோலையாக செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் அடிப்படை முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதை விருப்பப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
2. வட்டி விகிதம் மற்றும் வரிக் கழிவுகள்
8.20% காலாண்டு வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரிச் சலுகைகளையும் பெற முடியும்.
3. முன்கூட்டியே பணம் எடுப்பது மற்றும் கணக்கு மூடல்
கணக்கு தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு தனி நபர் தனது கணக்கிலிருந்து சில நிபந்தனைகளின் கீழ், முன்கூட்டியே பணத்தை எடுக்கலாம்.
கணக்கு தொடங்கி இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்குள் தனது கணக்கை மூடினால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 1.5% அபராதம் விதிக்கப்படும்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு மூடப்பட்டால், டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 1% அபராதம் விதிக்கப்படும். நீட்டிக்கப்பட்ட கணக்குகளைப் பொறுத்தவரை, முதல் வருடத்திற்கு பிறகு எந்த அபராதமும் இல்லாமல் கணக்கை மூடலாம்.
4. வயதுவரம்பு
60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். 55 முதல் 60 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்றவர்கள் (VRS அல்லது ஓய்வூதிய பலன்களுடன்) இந்த திட்டத்தில் இணையலாம்.
5. நியமன வசதி
இத்திட்டத்திற்கு தங்கள் கணக்குகளை திறக்கும் பொழுது நாமினிகளை நியமிக்கலாம். இது கணக்கு முதிர்ச்சி அடைவதற்கு முன்பு, கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் நாமினி உரிய தொகையைப் பெற தகுதியுடையவராவார்.
இத்திட்டத்தின் நன்மைகள்:
1. இது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால் உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் ஒரு நம்பகமான முதலீட்டு விருப்பமாக உள்ளது.
2. எளிதான முதலீட்டு செயல்முறை காரணமாக இந்தியாவில் உள்ள எந்த அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிய படிகளில் திறக்கலாம்.
3. இத்திட்டம் முதலீட்டாளர்களுக்கு வழக்கமான வருமானத்தை வழங்குகிறது. இது நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் வருமான வரியில் 80Cயின் கீழ் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரை வரிச் சலுகைகளும் கிடைக்கிறது.
4. மூத்த குடிமக்கள் தங்கள் அன்றாட நிதித் தேவைகளை பூர்த்தி செய்யவும், வழக்கமான மற்றும் நம்பகமான மாதாந்திர வருமானம் பெறவும் இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5. இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் விவரங்களை அறிவதற்கு, தேசிய சேமிப்பு நிறுவனம் (National Savings Institute) அல்லது வங்கிகளைத் தொடர்பு கொள்ளலாம்.