

லாபத்திற்கு வழிகாட்டும் தனிநபர் நிதி (Personal Finance) என்பது நம் வருமானம், செலவு, சேமிப்பு, முதலீடு மற்றும் கடன் ஆகியவற்றைத் திறம்பட நிர்வகித்து, நிதி இலக்குகளை அடைவதற்கான ஒரு திட்டமாகும். இது பட்ஜெட் தயாரித்தல், செலவுகளை கண்காணித்தல், சேமிப்பை அதிகரித்தல், சரியான முதலீடுகளை தேர்ந்தெடுத்தல், கடனைத் தவிர்த்தல் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்தல் (காப்பீடு) ஆகியவற்றின் மூலம் நிதி சுதந்திரத்தையும், நீண்ட கால செல்வத்தையும் அடைய உதவுகிறது. லாபகரமான பர்சனல் பைனான்ஸிற்கான (தனிநபர் நிதி) முக்கிய விதிகள் வருமானத்தை 50/30/20 என பிரித்தல் அவசியம்.
முக்கிய விதிகள்
பட்ஜெட் போடுவது:
நம் வருமானத்தில் 50% அத்தியாவசிய தேவைகளுக்கும் அதாவது வாடகை, உணவு, மளிகை பொருட்கள் மின்சார கட்டணம் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கும், 30% விருப்பங்களுக்கும் அதாவது பொழுதுபோக்கு, சுற்றுலாப் பயணம் போன்றவற்றிற்கு செலவிடுவதற்கும், 20% சேமிப்பு, பங்கு சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் கடன்களை அடைக்கவும் பயன்படுத்தலாம். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கான தொகையை அதிகரிக்கலாம்.
அவசரகால நிதி (Emergency Fund):
குறைந்தது 3-6 மாத செலவுகளுக்கான தொகையை அவசரகால நிதியாகத் தனியாக வைக்க வேண்டியது அவசியம். திடீர் வேலை இழப்பு அல்லது மருத்துவ செலவுகள் போன்ற எதிர்பாராத செலவுகளை சமாளிப்பதற்கு உதவும்.
கடன்களைக் கையாள்வது:
அதிக வட்டி கொண்ட கடன்களை, கிரெடிட் கார்டு கடன்கள் போன்றவற்றை முதலில் அடைக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால், கடன்கள் வாங்குவதில் கவனமாக இருக்கவேண்டும். கடன் வாங்குவது நம் சேமிப்பை பாதிக்கக் கூடாது.
முதலீடுகளை பிரித்தளிப்பது (Diversification):
பணத்தை சேமிப்பது மட்டும் போதாது அதை வளரச் செய்யவேண்டும். அதற்கு பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். எல்லாப் பணத்தையும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் நம் முதலீடுகளை பங்குகள், பரஸ்பர நிதிகள், தங்கம் எனப் பிரித்து முதலீடு செய்வது ஆபத்தைக் குறைக்க உதவும்.
ஓய்வூதிய திட்டமிடல்:
இளமையிலிருந்தே ஓய்வூதியத்திற்காக மாதந்தோறும் ஒரு பகுதியை ஒதுக்கி முதலீடு செய்யத் தொடங்குவது ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கை வாழ உதவும்.
ஆபத்துக்களை காப்பீடு செய்வது (Insurance):
ஆயுள் காப்பீடு (Life Insurance) மற்றும் மருத்துவக் காப்பீடு (Health Insurance) போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் எதிர்பாராத நிதி ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
வரி திட்டமிடல்:
அரசு வழங்கும் 80C போன்ற வரிச்சலுகைகளைப் பயன்படுத்தி வரியை குறைக்கலாம். அரசின் வரிச்சலுகை அளிக்கும் திட்டங்களான PPF, NPS போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் வரியைக் குறைத்து லாபத்தை அதிகப்படுத்தலாம். தனிநபர் நிதி மேலாண்மை மற்றும் லாபத்தை அதிகரிக்க வரித்திறமையான முதலீடுகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு நிதியாண்டு தொடக்கத்தில் பட்ஜெட் போடுவதும், ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை மறுஆய்வு செய்வதும், முதலீடுகளை பன்முகப்படுத்துவதும் அவசியம். நிதியியல் ரீதியாக முன்னேறவும், நம் பணத்தை சரியாக நிர்வகிக்கவும் இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் நம் நிதி இலக்குகளை அடைந்து நிதி சுதந்திரத்தைப்பெற முடியும்.