
ஒருவரின் சிபில் ஸ்கோர் தான், இன்று அவரது நாணயத்தை எடை போடுகிறது. சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், அவரை எந்த ஒரு வங்கியும் நம்பாது. ஒருவரின் சிபில் ஸ்கோர் தான் அவரது கடன் வாங்கும் திறனை நிர்ணயிக்கிறது. இதனாலேயே ஒருவர் வாங்கும் கடன்களை, எந்த அளவுக்கு உறுதியாக இருந்து, அதை அடைக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
சிபில் ஸ்கோர் குறையக் காரணம்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைய முக்கிய காரணமாக இருப்பது உத்திரவாத கையெழுத்து தான். இதில் கடன் வாங்கும் நபர், அந்த கடனை கட்டாவிட்டால், அந்த பணத்திற்கு தான் பொறுப்பு ஏற்பதாக கையெழுத்து இடுவது தான் உத்தரவாத கையெழுத்து என்று அழைக்கப்படுகிறது. பிற நபர்களுக்கு உத்திரவாத கையெழுத்து போடும் முன் பலமுறை சிந்தித்துக் கொள்வது நல்லது.
எங்காவது உத்தரவாத கையெழுத்து போட்டு விட்டால், அந்தக் கடன்களினால் உங்களுக்கும் சிக்கல் உண்டு. நீங்கள் உங்கள் நண்பரை நம்பி வங்கிகளிலும் அல்லது நிதி நிறுவனங்களிலும் கையெழுத்து போட்டுவிட்டால், அவர் ஒரு மாதம் கடனுக்கு தவணைத் தொகையை கட்டாவிட்டால் கூட அது உங்களது சிபில் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும்.
பெரும்பாலும் மற்றவர்களிடம் உத்திரவாத கையெழுத்து வாங்கும் நபர்கள் அந்த நிதி நிறுவனத்திடம் கடன் தொகையை சரியாக கட்டுவதில்லை. நிதி நிறுவனங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கடன் வாங்கிய நபரை பின் தொடர்ந்து தவணைத் தொகையை வசூலிக்க முயற்சி செய்வார்கள். சில நேரங்களில் அவர்கள் தவறிய தவனைத் தொகையை மட்டும் கட்டியிருப்பார்கள். அதற்கு உண்டான அபராத தொகையை கட்டாமல் கடைசி வரை இழுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால், இந்த அபராதத் தொகையும் நிலுவையில் உள்ள தொகையாக சிபிலில் காட்டப்படும். உத்திரவாதம் பெற்ற நபர் ஒழுங்காக பணம் கட்டாவிட்டாலும் உங்களின் சிபில் அடி வாங்கக்கூடும்.
ஒருவரின் சிபில் ஸ்கோர் 700 க்கு கீழே குறைந்து விட்டால், அதன் பின்னால் அவரால் எந்த ஒரு வங்கியிலும் தனிநபர் கடன் பெற இயலாது. அதன் பின்னர் அடமானக் கடன் மட்டுமே சில நிதி நிறுவனங்களில் பெற முடியும். அவ்வாறு பெறும் போது, சில நேரம் நீங்கள் உத்தரவாதம் கொடுத்துள்ள கடனை அடைக்க சொல்வார்கள். அவ்வாறு அடைக்காவிட்டால் அந்த லோன் உங்களுக்கு கிடைக்காது.
ஒரு சிலர் தங்கள் பெயரில் கடன் வாங்கிவிட்டு, அதை சரியான தேதியில் வங்கி கணக்கில் பிடித்தம் செய்ய, போதுமான பணத்தை வைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் எப்போதும் கலெக்ஷன் ஏஜென்டிடம் பணம் கட்டி பழக்கப்பட்டு இருப்பார்கள். அதே தேதியில் ஏஜென்டிடம் பணம் கட்டினாலும் இவ்வாறு செய்வது, உங்களது கிரெடிட் ஸ்கோரினை பாதிக்கும் இது நீங்கள் அடுத்த முறைய கடன் பல நிறுவனங்கள் உங்களுக்கு கடன் தர விரும்ப மாட்டார்கள்.
குறைந்த சிபில் ஸ்கோரை உயர்த்துவது
நிலுவையில் ஏதேனும் கடன் இருந்தால் அதை உடனடியாக, முழுமையாக அடைத்து விடுங்கள். அவ்வாறு அடைக்கும்போது அசல் தொகையை குறைக்குமாறு நிறுவனத்திடம் எந்த ஒரு வேண்டுகோளும் விடுக்க வேண்டாம். சிறிய அளவில் ஏதேனும் கடன் எடுத்து அதை சரியாக அந்த தேதியில் கட்டி வர வேண்டும்.
எப்போதும் கடன் தொகையை, உங்களது வங்கிக் கணக்கின் மூலம் பிடித்தம் செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். சிறிய அளவில் இரண்டு, மூன்று நகைக்கடன்களை வங்கியில் பெற்று, அதற்கு மாதாமாதம் வட்டியை வங்கியில் கட்டி வர வேண்டும். மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அந்த நகைகளை முழுமையாக மீட்டு விட்டால் , உங்களது சிபில் ஸ்கோர் உயர்ந்துவிடும்.
இவ்வாறு உயர்த்தப்பட்ட சிபில் ஸ்கோர் உங்களுக்கு அடமான கடன்களில் குறைந்த வட்டியில் பெற வாய்ப்பாக இருக்கும். அதே நேரம் உங்களது முந்தைய கடன் அடைத்த திறனை பொறுத்து தான் தனிநபர் கடன் கிடைக்கும். அடிக்கடி உங்களது சிபில் ஸ்கோரை செக் செய்து கொண்டே இருக்கக் கூடாது. அவ்வாறு செய்வதும் சிபில் ஸ்கோர் குறைய காரணமாக இருக்கும். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வங்கிக்கு சென்று உங்களது சிபில் ஸ்கோரை சரி பார்க்கலாம்.