
பணம் என்ற விஷயம் இன்று உலகளவில் பல விஷயங்களை செய்துகொண்டிருக்கிறது. இதில் சில நாட்டு பணங்களுக்கு அதிக மதிப்பும், சிலதுக்குக் குறைவான மதிப்பும் இருக்கின்றன. ஒருவேளை பணம் அதிகமாக இருந்தால் அது பணக்கார நாடோ?
பணக்கார நாடாக இருக்க பணம் மட்டும்தான் அவசியமா?
இந்தியாவுக்கு அதிக பணம் தேவைப்பட்டால் அதை ஏன் அச்சிடக்கூடாது? என்று நினைப்பவரா நீங்கள். ஆனால், அதற்கு பொருளாதாரமும் (economics) ஒரு புறம் உயர வேண்டும். இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பண நிலைத்தன்மையை (Money stability) பராமரிக்க ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட (regulated framework) கட்டமைப்பின் கீழ் செயல்படுகிறது. எந்த ஒரு பொருளாதார ஆதரவு இல்லாமல் தேவையற்ற அதிக நாணயத்தை அச்சிடுவது பணவீக்கம், நாணய மதிப்பிழப்பு, நீண்டகால நிதி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.
எப்போது, ஏன் RBI பணத்தை அச்சிடுகிறது?
RBI பல காரணங்களின் அடிப்படையில் பணத்தை அச்சிடுகிறது. திட்டமிடப்பட்ட GDP வளர்ச்சி (Gross domestic product), பணவீக்கக் கட்டுப்பாடு, புழக்கத்தில் உள்ள பணத்திற்கான தேவை மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டிய அவசியத்திற்காகவும்தான். இந்தச் செயல் எந்த ஒரு அரசியல் விருப்பத்திற்காகவோ அல்லது பொதுமக்களின் ஆசையின் அடிப்படையில் செயல்படாது.
இந்த செயல்முறை 1934ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், நிதி அமைச்சகத்துடன் கவனமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, நாணய அச்சிடுதல் என்பது செல்வத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி அல்ல; இது வளர்ந்துவரும் பொருளாதாரத்தைச் சீர்குலைக்காமல் ஆதரிப்பதற்கான ஒரு வழிமுறையே.
தேவையான அனுமதிகளும், செயல்முறைகளும்
பணத்தை அச்சிடுவதற்கு முன் RBI மேக்ரோ பொருளாதார குறிகாட்டிகளை (macroeconomic indicators) மதிப்பிட்டு அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கும். அதன்பின் உண்மையான அச்சிடுதல் நான்கு முக்கிய அச்சகங்களில் செய்யப்படுகிறது. நாசிக் (Nasik), தேவாஸ் (Dewas), மைசூர் (Mysuru) மற்றும் சல்போனி (Salboni) நாணய அச்சிடுதல் இந்திய பாதுகாப்பு அச்சிடுதல் மற்றும் நாணயமாக்கல் கழகம் (Security Printing and Minting Corporation of India Limited) மூலம் கையாளப்படுகிறது. ஒவ்வொரு நோட்டும், நாணயமும் கடுமையான பாதுகாப்பு தரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இது போலியானதைத் தடுக்கவும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.
சில நாடுகளின் பணம் மட்டும் ஏன் உயர்ந்த நிலையில் உள்ளது?
சில நாடுகளில் வலுவான பொருளாதாரங்கள் இருக்கலாம்; எனவே, அவர்களின் பணம் அதிக மதிப்புடையதாக இருக்கும். மற்ற நாடுகளில் பலவீனமான பொருளாதாரங்கள் இருக்கலாம் அல்லது அதிக பணத்தை அச்சிடலாம்; இது அவர்களின் நாணயத்தின் மதிப்பை இழக்கச் செய்யலாம். ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு அதிக பொருட்களை விற்று விலைகளை நிலையாக வைத்திருந்தால் அதன் பணம் வலுவாகவே இருக்கும். அதனால்தான் உண்மையான வளர்ச்சி இல்லாமல் கூடுதல் பணத்தை அச்சிடுவது உண்மையில் நாட்டிற்கு உதவுவதற்குப் பதிலாக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.
சேதமடைந்த அல்லது கிழிந்த நாணயத்தை என்ன செய்யலாம்?
உங்களிடம் கிழிந்த அல்லது சிதைந்த நோட்டுகள் இருந்தால் அதை மாற்றிக்கொள்வதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை RBI கொடுத்துள்ளது. அவற்றை மாற்ற நீங்கள் எந்த வங்கிக் கிளையையும் அணுகலாம். அவற்றில் காணக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள் போன்ற சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால்; சேதமடைந்த நோட்டுகளை ஏற்றுக்கொள்ள வங்கிகள் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளன. இதை வாங்க ஒரு வங்கி மறுத்தால் RBIயால் அபராதம் விதிக்கப்படும்.