

இன்றைய காலகட்டத்தில் குடும்ப நிதிச் சுமையை பகிர்ந்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. ஒரு பெண்ணுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரது குடும்பம் கணிசமான வருமானம் இல்லாமல் தவிக்க நேரிடும். இது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
எனவே தங்கள் குடும்பம் எப்போதும் நிதிநிலைத் தன்மையை அடைய பெண்கள் ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் பிளான் எடுக்கவேண்டும். எதிர்பாராத இழப்புகளைத் தாங்கவும், நீண்ட ஆயுட்காலத்தை எதிர்கொள்ளவும், பணி இடைவெளிகளைச் சமாளிக்கவும் பெண்களுக்கான டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் மிகவும் அவசியமாகும்.
1) டேர்ம் இன்சூரன்ஸ் ஏன் அவசியமாகிறது தெரியுமா?
*குடும்ப நிதி பாதுகாப்பு:
பெண்களுக்கான டேர்ம் இன்சூரன்ஸ் என்பது எதிர்பாராத மரணம் அல்லது நோய் ஏற்படும்போது குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். வருமானம் ஈட்டும் பெண்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், அவரது குடும்பத்தின் அன்றாடச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இது உதவுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் மற்றும் தனிமையில் வாழும் (single) பெண்களுக்கும் இது மிகவும் அவசியமானதாகும்.
*கடன் சுமைகளில் இருந்து விடுதலை:
வீடு, வாகனக் கடன்கள் இருந்தால், பாலிசிதாரரின் மறைவுக்குப் பிறகு குடும்பம் கடன் சுமையால் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகிறது.
*குறைந்த கட்டணத்தில் அதிக பாதுகாப்பு:
பெண்களின் ஆயுட்காலம் பொதுவாக ஆண்களைவிட அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணம் குறைவாகவே இருக்கும்.
தீவிர நோய்களுக்கான சிகிச்சை(critical illness cover) மற்றும் மகப்பேறு தொடர்பான சிக்கல்களுக்கு கூடுதல் கவரேஜ் பெறலாம்.
*திட்டத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:
உங்கள் வருமானம் மற்றும் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளை (குழந்தைகள் கல்வி, திருமணம் போன்றவை) கருத்தில் கொண்டு கவரேஜ் தொகையை கணக்கிட வேண்டும்.
பல்வேறு நிறுவனங்களின் பாலிசி கட்டணங்கள் மற்றும் சலுகைகளை ஆன்லைனில் ஒப்பிட்டு பார்ப்பது சிறந்தது.
2) ஓய்வு கால பென்ஷன் திட்டங்கள் ஏன் அவசியமாகிறது தெரியுமா?
*நிதி சுதந்திரம்:
முதுமைக் காலத்தில் பிறரை சார்ந்திருக்காமல் தங்கள் தேவைகளை தாங்களே கவனித்துக் கொள்ளவும், கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் வாழ ஓய்வூதியம் பெரும் உதவியாக இருக்கும்.
*நீண்ட ஆயுட்காலம்:
ஆண்களைவிட பெண்களின் சராசரி ஆயுட்காலம் அதிகம் என்பதால் நீண்ட கால ஓய்வுக்காலத்திற்கு அதிக நிதி தேவைப்படுகிறது.
*பணி இடைவெளிகள்:
திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறு அல்லது குடும்பப் பொறுப்புகள் காரணமாகப் பெண்கள் தங்கள் பணியிலிருந்து நீண்ட இடைவெளி (Career Break) எடுக்க நேரிடுகிறது. இதனால் வருமானமும் சேமிப்பும் குறைய வாய்ப்புள்ளது.
*பெண்களின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய- மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல ஓய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு பெண்ணும் தங்களின் தேவைக்கேற்ப முதலீடுகளை செய்து பயன்பெறலாம்.
மகப்பேறு மற்றும் பணி இடைவெளிகளால் ஏற்படும் வருமான இழப்பைத் தடுத்து, உங்கள் சேமிப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வழிகளை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். மிகக் குறைந்த பிரீமியத்தில் பெரும் தொகையைக் காப்பீடாகப் பெறுவதன் மூலம், உங்களைச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை எவ்விதச் சரிவும் இன்றி மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.