

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வேகமடைந்து வருகிறது. தொழில்துறை தரவுகளின் படி இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் 4 பேரில் ஒருவர் பெண்ணாக உள்ளார். பெண் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் இணைவது மட்டுமல்லாமல் நீண்ட காலம் முதலீடு செய்து, பெரிய தொகைகளையும் முதலீடு செய்கிறார்கள் என்பதை இந்தத் தரவு சுட்டிக்காட்டுகிறது.
பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் சாத்தியமான நிதி சுதந்திரம்:
நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்கள் தங்கள் நிதியை நிர்வகிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள் நிதி சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வும், டிஜிட்டல் செயலிகள் மூலம் முதலீடு செய்யும் வசதியும், சிறிய தொகையில் முதலீட்டை தொடங்கும் வாய்ப்பும் அதிகரித்து வருவதும்தான் காரணமாக அமைகிறது.
பெண் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் நீண்டகால முதலீட்டையே விரும்புகின்றனர். நிதி சுதந்திரம் மற்றும் வருங்காலத்துக்கான பாதுகாப்பு அரணாகக் கருதி பெண்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருவது போற்றத்தக்கது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களான பெண்களில் 82% பேர் குடும்ப நிதி முடிவெடுப்பதில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். மேலும் தயாரிப்புகள் தெளிவாக விளக்கப்படும் பட்சத்தில், நிறைய பெண்கள் நீண்ட காலத்திற்கு பங்குகளில் முதலீடு செய்யத் தயாராக உள்ளனர். இந்தியாவில் உள்ள மொத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் பெண்கள் சுமார் 25% ஆக உள்ளனர். இந்திய பங்குச் சந்தையில் பெண்களின் அதிகரித்த பங்களிப்பு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சந்தையின் ஸ்திரதன்மைக்கு உதவுகிறது.
நிதி விழிப்புணர்வு மற்றும் சுதந்திரம்:
பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்பால், தங்கள் சொந்த வருமானத்தை நிர்வகிப்பதிலும், எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்வதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. வருங்கால பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் நிதி சுதந்திரத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவதால் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எஸ்.ஐ.பி (SIP) முறையின் எளிமை:
பெரிய தொகை தேவையில்லை, மாதம் நூறு ரூபாயில் கூட முதலீட்டைத் தொடங்கலாம் என்ற நிலை வந்துள்ளது. இது பெண்களின் நீண்டகால சேமிப்புப் பழக்கத்திற்குப் பெரிதும் கை கொடுக்கிறது. SIPயில் முதலீடு செய்யும் பெண்களில் பாதி பேர் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். இது இளம் பெண்களிடையே அதிகரித்து வரும் நிதி சுதந்திரம் மற்றும் டிஜிட்டல் அணுகலை பிரதிபலிக்கிறது.
டிஜிட்டல் மயம் (ஆப்ஸ் மற்றும் செயலிகள்):
டிஜிட்டல் தளங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் செயலிகள் மூலம் வீட்டில் இருந்தபடியே முதலீடு செய்யும் வசதி இருப்பதால், பெண்கள் வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது மிகவும் எளிதாகி விட்டது.
பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் இலக்கு அடிப்படையிலான முதலீடு:
குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக திட்டமிட்டு முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடம் இயல்பாகவே அதிகம் உள்ளது.
சமூக ஊடகங்கள்:
நிதி சார்ந்த தகவல்கள், பாட்காஸ்ட்கள்(Podcasts) மற்றும் வலைப்பதிவுகள் எளிதாகக் கிடைப்பதால், இளம் தலைமுறைப் பெண்கள் முதலீட்டு நுணுக்கங்களை மிக விரைவாக கற்றுக் கொள்கிறார்கள்.
சமீபத்திய ஆய்வின்படி கிட்டத்தட்ட 80% பெண் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் 35 வயதுக்கு முன்பே முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள் என்றும், இளம் வயதினரிடையே சேமிப்பு முதலீட்டுத் திட்டங்கள் (SIPs) பிரபலமடைந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. பெண்களின் முதன்மை தேர்வாக ஈக்விட்டி ஃபண்டுகளும், முறையான முதலீட்டுத் திட்டமான SIP (Systematic Investment Plan) களும் உள்ளன.
இந்தத் தகவல்களின் வழிகாட்டுதல் மூலம், நீங்கள் பிறரைச் சார்ந்து இருக்கவேண்டிய அவசியமில்லாமல், உங்கள் சொந்த உழைப்பின் வருமானத்தை ஸ்மார்ட்டான முறையில் பெருக்குவதோடு, உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தூணாக உங்களை மாற்றிக்கொள்ளும் மாபெரும் மாற்றத்தை அடைவீர்கள்.
Reference: BSE India Investor Growth Statistics