திரைப்பட பின்னணி பாடகி சின்மயி குடும்பத்தினரிடம் நூதன முறையில் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய மொழிகளில் பல பாடல்களை பாடி, மிகவும் பிரபலமானவர் சின்மயி. தன்னுடைய மனதில் பட்ட எதையும், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், அவ்வபோது தன்னுடைய சமூக வலைதளத்தில், சமூக கருத்துடைய விஷயங்களையும், சமூக அவலங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது வயதானவர்களை குறிவைத்து நடக்கும், நூதன பண மோசடி குறித்து இவர் போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சமீப காலமாக தொலைபேசிக்கு வரும் அழைப்புகளில், நாம் OTP எண்ணை பகிர்ந்தால் மட்டுமே பணம் பறிபோவதாக கூறப்பட்டு வந்த நிலையில், OTP-எண்ணை பகிராமலேயே நூதன மோசடி நடைபெற்று வருவதாகவும், இப்படி தன்னுடைய குடும்பத்தினர் பல லட்சத்தை இழந்துள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார்.
அதாவது தொலைபேசிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுவதாகவும், அந்த லிங்கை கிளிக் செய்ததும் வங்கியில் இருந்த பணம் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். வயதானவர்களை குறி வைத்தே இதுபோன்ற மோசடிகள் நடப்பதாகவும் தெரிவித்துள்ள சின்மயி, சைபர் கிரைமில் இதுகுறித்து புகார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேரடியாக திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், ஆன்லைன் மோசடிகள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. OTP கொடுப்பது தான் பிரச்சனை என்று சொன்னார்கள். தற்போது OTP இல்லாமலேயே பணம் பறிபோயுள்ளதால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.